ஈஷாவில் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 10-ஆம் ஆண்டு பொதுக் குழு கூட்டம் : நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2023, 9:33 am
Isha -Updatenews360
Quick Share

ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலுடன் இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 10 ஆம் ஆண்டு பொதுக் குழு கூட்டம், கோவை ஈஷா யோக மையத்தில் இன்று (அக் 30)வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்ட முதல் FPO நிறுவனமாகும். சத்குருவின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் 2013 இல் தொடங்கப்பட்டது. 5859 ஏக்கர் பரப்பளவில் பயிரிடக்கூடிய நிலத்தை உள்ளடக்கிய இந்த நிறுவனத்தில் 1063 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர், அதில் 404 பேர் பெண் விவசாயிகள் மற்றும் 776 சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவர்.

இந்நிறுவனம் அதனுடடைய சிறந்த செயல்பாட்டிற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது. குறிப்பாக அக்டோபர் 2023 இல் புது தில்லியில் நடைபெற்ற CII – FPO எக்ஸலன்ஸ் விருது விழாவில் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மூலம் ‘மெம்பர்ஷிப் என்கேஜ்மென்ட் ‘ பிரிவில் சிறந்து விளங்கியதற்காக விருது வழங்கப்பட்டது.

600க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற 10-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் 2022-2023க்கான ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. அதில் இந்த நிறுவனம் நடப்பு ஆண்டில் அதன் செயல்பாடுகளின் மூலம் ரூ.14.72 கோடி வருவாயை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தேங்காய், மட்டை, காய்கறி, விவசாய இடுபொருள் அங்காடி, விற்பனை அங்காடி, போக்குவரத்து, சொட்டு நீர் பாசனம், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்கள் என விவசாயிகளின் பல தரப்பட்ட சேவைகளை ஒருங்கிணைத்து இந்த நிறுவனம் வருவாய் ஈட்டியுள்ளது. குறிப்பிடப்பட்ட இந்த ஆண்டில் இந்த நிறுவனம் அதன் விவசாயிகள் உற்பத்தி செய்த 1.02 கோடி தேங்காய், 156 டன் காய்கறிகள் மற்றும் 10.4 டன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை விற்பனை செய்துள்ளது.

இந்த நிறுவனத்தன் செயல்பாடுகள் மற்றும் இதன் வருங்கால திட்டம் குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் திரு. குமார் பேசுகையில், “மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஈஷா அவுட்ரீச் மூலம் ரூ. 1 கோடி மதிப்பிலான மண் பரிசோதனை ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பயிர்களை பாதிக்கும் நோய்களைக் கண்டறியவும் மற்றும் வளர்ச்சி மேம்பாட்டிற்காகவும் பிரத்தியேக மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், “Fair trade certification” சான்றிதழ் பெறுவதற்கான வேலைகள் நடைப்பெற்று வருகிறது” என்றார்.

மத்திய அரசின் 10,000 FPO க்களை உருவாக்கி ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் ஈஷா அவுட்ரீச் தமிழ் நாடு மற்றும் கர்நாடகத்தில் 24 FPOக்களை ஆதரித்து ஊக்கப்படுத்தி வருகிறது. அந்த 24 FPO க்களுக்கும் முன்மாதிரி நிறுவனமாக வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்படுகிறது.

Views: - 270

1

0