செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 16 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிப்பு.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2024, 5:47 pm
MAngo
Quick Share

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 16 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிப்பு.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!

கோவை மாநகரப் பகுதியில் உள்ள வைசியால் வீதி, பெரிய கடை வீதி, பவள வீதி, கருப்ப கவுண்டர் வீதி, கெம்பட்டி காலனி ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஏழு குழுக்களாக பிரிந்து இன்று திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது குடோன்கள் மற்றும் மொத்த விற்பனை கடைகள் என மொத்தம் 55 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 15 குடோன்கள் மற்றும் 16 மொத்த விற்பனை கடைகளில் சிறிய இரசாயன பொட்டலங்கள் பழ பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சுமார் 16.1 டன் எடையும், சுமார் 100 கிலோ எடை அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அழுகிய ஆப்பிள்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் மொத்த சந்தை மதிப்பு சுமார் 13 லட்சம் ஆகும்.பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் மாநகராட்சி குப்பைகிடங்கில் உள்ள உரம் தயாரிக்கும் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,’இரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் அழுகிய ஆப்பிள்கள் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து 21 மொத்த விற்பனை கடைகள் மற்றும் குடோன்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் நோட்டிஸ் வழங்கப்பட உள்ளது.

மேலும் இது போன்று சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.இந்த ஆய்வில் செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்திய இரசாயன பாக்கெட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

கார்பைட் கல், எத்திலீன் இரசாயன பவுடர் பாக்கெட்டுகளை கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால் வயிறு தொடர்பான பிரச்சினைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி, பேதி போன்ற உபாதைகள் உண்டாகலாம். சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இதில் ஆர்சானிக் மற்றும் பாஸ்பரஸ் இருந்தால் புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்புள்ளது. உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு உடல் வலுவிலக்க வாய்ப்புள்ளது.எனவே, இது போன்று முறையற்ற விகிதத்தில் இரசாயனங்கள் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைப்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் படிக்க: அண்ணாமலை கையால் மாட்டுக்கறி விருந்து கொடுத்தால் நாங்கள் சாப்பிட தயார் : ஈவிகேஎஸ் கிடுக்குப்பிடி!

மேலும் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற திடீர் கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற குறைபாடுகளை கண்டறிய நேரிட்டால் 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Views: - 127

0

0