‘பையன் காலையில வரை துடிச்சுக்கிட்டே இருந்தான்… ஒரு டாக்டரும் வந்து பார்க்கல’.. மகனை இழந்த தந்தை பகீர் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
21 July 2023, 12:02 pm
Quick Share

அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் தனது மகன் உயிரிழந்து விட்டதாக அவரது தந்தை கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

தாராபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ் – காளியம்மாள் தம்பதியினரின் மகன் ராஜேஷ் குமார் (38). கோவை அரசு மருத்துவமனையில் கடந்த புதன்கிழமையன்று டயாலிசிஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உயிரிழப்புக்கு அரசு மருத்துவமனையே காரணமே என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் மருந்துகளை வெளியில் வாங்கி கொள்ளவும் என மருத்துவர்கள் கூறியதாகவும், லஞ்சம் கேட்பதாகவும், செவிலியர்கள் முறையாக நோயாளிகளை கவனித்து கொள்வதில்லை எனவும் ராஜேஷ்குமாரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

‘காலையில 9 மணி வரைக்கும் பையன் துடிக்குறான்.. யாருமே பாக்கல..நைட் எல்லாம் டியூட்டி டாக்டர் தூங்குறாரு. டையாலிஸிஷ் ரூம்ல டிரெய்ணிங் நர்சுங்க ஆடிக்கிட்டு இருக்காங்க. எதுக்கு எடுத்தாலும் லஞ்சம். மருந்து எல்லாத்தையும் வெளிய வாங்கிட்டு வரச் சொன்னாங்க. இங்க எதுவுமே இலவசம் இல்ல.’ டையாலிஸிஷ் ரூமுக்குள்ள கூப்பிட்டுப் போன 10 நிமிசத்துல இறந்துட்டான்னு சொல்லறாங்க,’ எனக் குமுறினார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ராஜேஷ்குமார் கிட்னியின் செயல்திறன் மோசமாக தான் இருந்ததாகவும், திசுக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அவருக்கு நீண்ட நாட்களாகவே அவருக்கு பாதிப்பு இருந்ததால் அவருக்கு நீண்ட கால டயாலிசிஸ் தேவைப்படும் நிலை இருந்தாகவும், ஏற்கனவே 8 முறை டயாலிசிஸ் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், கோவை அரசு மருத்துவமனைக்கு கடந்த ஐந்தாம் தேதி தான் முதலில் சிகிச்சைக்கு அவர் வந்ததாகவும், அவருக்கு ஜெனடிக் பரிசோதனை செய்தபோது ஜீன்கள் மோசமாக இருந்ததாக தெரிவித்தார். இந்த பரிசோதனை செய்ய அதிக செலவு ஆகும் என்பதால் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளித்ததாகவும், அவருக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்ததாக கூறினார். இங்கு அவருக்கு அதிக அக்கறையுடன் தான் சிகிச்சை அளித்ததாகவும், அவர் வியாதிகளால் தான் இறந்ததாகவும் தெரிவித்த அவர், சிகிச்சை முறையில் எந்த தவறும் இல்லை என்றார். மேலும், இறந்தவரின் குடும்பத்திற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

இங்கு மருந்துகளை வெளியில் வாங்க கூறுவது இல்லை எனவும், லஞ்சம் யார் கேட்டது என கூறினால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும்இ ஸ்கேன் செய்வதற்கு 500 ரூபாய் கட்டணம் என்பது நடைமுறையில் இருப்பது தான் எனவும், மருந்து தட்டுப்பாடு ஏதேனும் இருந்தால் துறை தலைவர்கள் தரப்பில் உரிய தகவல் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் ராஜேஷ்க்கு குணப்படுத்தும் வகையிலான நோய் இல்லை என தெரிவித்த அவர், 50 வயதிற்கு மேல் வரும் நோய் 35 வயதிலேயே அவருக்கு வந்து விட்டதாகவும், அதுமட்டும் இன்றி இணை நோய்கள் இருந்ததாகவும் கூறினார். கோவை அரசு மருத்துவமனையில் எமர்ஜென்சி என்றால் உடனடியாக எடுக்கப்படுவதாகவும், Elective cases என்றால் வேறு நாட்கள் குறிப்பிட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் பொதுவான ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Views: - 256

0

0