75வது சுதந்திர தின விழா… 3 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் : கோவை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்..!!

Author: Babu Lakshmanan
9 August 2022, 6:59 pm
Quick Share

75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக கோவை மாவட்டத்தில் அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் நிறுவனங்களிலும் தேசிய கொடியினை ஏற்றிட தேசிய அளவிலும் மாநில அளவிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடி ஏற்றி சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசியக் கொடியினை வீடுகளில் ஏற்றிய பின் அதனை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் எனவும் தேசிய கொடியின் புனித தன்மையை பேணும் வகையில் எவ்வித அலட்சியமும் அவமரியாதையும் இன்றி கையாள வேண்டும் எனவும் தேசியக் கொடியை திறந்த வெளியிலோ குப்பைத் தொட்டியிலோ வயல்வெளிலோ எரியக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒத்துழைப்பு நழுகி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் 13ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடி ஏற்றி கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 498

0

0