நள்ளிரவில் அதிமுக நிர்வாகி மகன் கைது… திமுக அரசின் அடியாட்களை போல செயல்படும் காவல்துறை ; ஆட்சியரிடம் அதிமுகவினர் பரபரப்பு புகார்!!

Author: Babu Lakshmanan
26 December 2022, 5:01 pm
Quick Share

கரூர் ; கரூரில் கண்டன பொது கூட்டத்தை நடத்த விடாமல் தடுக்க அதிமுகவின் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் வழக்கறிஞர் பிரிவினர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- கரூரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த அதிமுக கண்டன பொதுக்கூட்டம் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தோடு, தொடர்ந்து அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டு வருகிறது.

கரூரில் சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலின்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது மட்டும் வழக்கு பதிந்த கரூர் மாவட்ட காவல்துறையினர், திமுகவினர் மீது வழக்குப் பதியவில்லை. மேலும், நேற்று நள்ளிரவில் அதிமுக நிர்வாகி ஒருவரின் மகன் காவல்துறையினர் மூலமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்த போலீசார் எந்த காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள்? யார் என்பது குறித்தும்? கைது செய்யப்பட்ட நபர் இதுவரை எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. இதுகுறித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக மாவட்ட அவைத் தலைவர் திரு.வி.க-வை கடத்திய நபர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது வன்மையான கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இது போன்ற செயல்கள் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்று தெரிவித்தார்.

Views: - 506

0

0