ஒட்டுமொத்தமாக திரண்டு வந்த கல்லூரி மாணவர்கள்… திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த எஸ்.பி.வேலுமணி…!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 August 2023, 7:56 pm
SP Velumani - Updatenews360
Quick Share

கோவையில் முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் 400 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்ற அக்கட்சியின் மாநகர மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக புதிதாக கட்சியில் இணைந்த மாணவர்களுக்கு சால்வைகள் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தானும் கல்லூரி காலத்தில் மாணவர் அணியில் இணைந்து பணியாற்றி தற்போது முக்கிய பொறுப்புகளுக்கு வந்துள்ளேன் என்று கூறி தனது கல்லூரி கால நினைவுகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும் இது அதிமுகவில் மட்டுமே சாத்தியம் எனவும் சாதாரண தொண்டராக இருந்த எடப்பாடியார் இன்று கட்சியின் பொதுச் செயலாளராகவும், நான்கரை ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்து மக்களுக்கான நல்லாட்சியை வழங்கினார் என்றும் கூறினார்.

மேலும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி காட்டியவர் எடப்பாடி பழனிசாமி எனவும் அதுபோல் புதிதாக இணைந்துள்ள நீங்களும் சிறப்பாக கட்சி பணியாற்றுங்கள் உங்களுக்கான மரியாதையும் பதவிகளும் உங்களைத் தேடி வரும் என்றும் தெரிவித்ததுடன் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும், பெற்றோர்கள் கல்லூரி கட்டணம் செலுத்த பல்வேறு இன்னல்களுக்கு இடையே சிரமப்பட்டு கல்லூரி கட்டணங்களை கட்டி உங்களைப் படிக்க வைக்கும் நிலையில் தாய் தந்தையர்களே தெய்வம் என்றும் அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவருடைய கடமை என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,தற்பொழுது தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று கட்சியில் இணைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்காக பல்வேறு திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி காட்டியவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்திற்கு எதுவும் செய்யாத ஆட்சியாக திமுக அரசு இருப்பதாக கூறிய அவர், அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை என்பது இரண்டு கோடியை கடந்து சென்று கொண்டிருக்கின்ற வேளையில் தற்பொழுதும் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருவதாகவும் மதுரையில் நடைபெறும் மாநாட்டில் எத்தனை பேர் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளார்கள் என்ற தகவலை எடப்பாடியார் அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டார்.

Views: - 244

0

0