பொது இடத்தில் சிறுநீர் கழித்த நபர்: வம்பிழுத்து இரும்பு கம்பியால் தாக்கிய கும்பல் கைது!!

Author: Rajesh
29 April 2022, 9:12 pm
Quick Share

கோவை: பொது இடத்தில் சிறுநீர் கழித்தவரை இரும்பு கம்பியால் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை ஆவாரம்பாளையம் கந்தவேல் நகரை சேர்ந்தவர் பாலசந்திரன் பெயிண்டர். இவர் நேற்று ரத்தினபுரி 7வது தெருவில் உள்ள பாலத்தின் அருகே சிறுநீர் கழித்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த 4 பேர் ஏன் இந்த இடத்தை அசுத்தம் செய்கிறாய்? என கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி பாலசந்திரனை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு சென்றுள்ளனர்.

இதில், காயமடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து ரத்தினபுரி போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

இதில், தாக்குதல் நடத்தியது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாணிக்கராஜ் , தென்காசி பாவூர்சத்திரத்தை சேர்ந்த ஆனந்த், தென்காசி சுரண்டையை சேர்ந்த சரவணன், உடுமலையை சேர்ந்த பூபதி என்பது தெரியவந்தது.

இவர்கள் 4 பேரும் கோவையில் வாழை இலை வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேர் மீதும் தாக்குதல், கொலைமிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 677

0

0