மொத்தம் 3,000 தமிழ் எழுத்துக்கள்… இது ஆசியாவிலேயே முதல்முறை ; கோவையை கலக்க வரும் புதுவிதமான திருவள்ளுவர் சிலை..!!!

Author: Babu Lakshmanan
9 August 2023, 2:31 pm
Quick Share

உலகிலேயே முதல்முறையாக தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவரின் சிலை விரைவில் கோவையில் திறக்கப்பட உள்ளது.

தமிழ் எழுத்துக்கள் கொண்ட 20 அடி உயர திருவள்ளுவர் சிலை அனைவரையும் கவரும் வண்ணம் அமைய உள்ளது. கோவை மாநகராட்சியில் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி பணிகள், சீர்மிகு நகர திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் 7 குளங்கள் சீரமைக்கப்பட்டு, குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. அதேபோல், ரேஸ்கோர்ஸ், பகுதியிலும் பல்வேறு சிலைகள், வண்ண வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, கோவை பொள்ளாச்சி சாலை குறிச்சி குளம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிச்சி குளத்தை சுற்றிலும் மின் விளக்குகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி தமிழர்களின் பெருமையை பறைச்சாற்றும் வகையில், ஜல்லிக்கட்டு விளையாட்டு சிலைகள், பாரம்பரிய நடனம், தமிழர் விழா பொங்கல், ஏர் உழும் வண்டிகள் ஆகியவற்றின் மாதிரி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குறிச்சி ரவுண்டானாவின் மையத்தில் தமிழ் எழுத்துகளால் ஆன திருவள்ளுவர் சிலை அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த திருவள்ளுவர் சிலை 2.50 டன் எடையில் 20 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் அறம் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலை மற்றும் இரவு நேரங்களில் விளக்குகளால் ஜொலிக்கும் வண்ணம் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் இந்த சிலை மக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது. இந்த சிலை திறக்கப்பட்டால் கோவையின் ஸ்மார்ட் சிட்டி பகுதிகளில் முக்கியமான அடையாளமாக குறிச்சி பகுதி திகழும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Views: - 288

0

0