பைக்கில் சாகசம்… இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு கெத்து காட்டிய இளைஞர்கள்… அதிரடி காட்டிய போலீசார்…!!!

Author: Babu Lakshmanan
15 November 2023, 1:29 pm
Quick Share

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் சாகசம் செய்து அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட மூன்று இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படை அமைக்கப்பட்டு, வடகரை, பண்பொழி திருமலை கோவில் சாலை, இலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டு வந்தனர். அதனை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

இதை அறிந்த அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையிலான தனிப்படையினர் தேடி வந்தனர். அப்பொழுது, வடகரை கீழத்தெருவை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரின் மகன் முகம்மது ஆசிக் (21), வடகரை ரஹ்மானியாபுரம் மேலத்தெருவை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவரின் மகன் ஷேக் ஒலி (25) ஆகியோர் மீது அச்சன்புதூர் காவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், புளியரை கொல்லம் மெயின் ரோட்டை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன் கௌதம் கிருஷ்ணா (24) என்பவர் மீது இலத்தூர் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், இதுபோன்று உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் ஆபத்தான முறையில் சாகசம் செய்து பிற இளைஞர்களுக்கு தவறான முன் உதாரணமாக இருக்கும் வகையில், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு செயல்படுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 270

0

0