நாளை ரெய்டுக்கு வர வேண்டாம்… 2ஜி வழக்கில் திமுக – காங்கிரஸ் போட்ட நாடகம் ; அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
16 January 2024, 4:37 pm
Quick Share

2 ஜி விசாரணையில் சி.பி.ஐ. ரெய்டுகளின் நேரத்தை தி.மு.க. காங்கிரஸ் முடிவு செய்து விசாரணையை நீர்த்து போக செய்யும் வகையில் செயல்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தமிகத்தை ஆளும் திமுக அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறார். இந்த சூழலில் ஏற்கனவே திமுக பைல்ஸ் என்று திமுக ஊழல் பட்டியலை இரு கட்டங்களாக வெளியிட்டுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பொங்கல் தினமான நேற்று முன்னாள் உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட்டுடன் திமுக எம்பியும், திமுக பொருளாளருமான டிஆர் பாலு உரையாடும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஊழல் தன்மையை அம்பலப்படுத்தும் பலவற்றில் இதுவும் ஒன்று. இந்த கூட்டணி 2004 முதல் 2014 வரை வேறு பெயரில் இருந்தது. டி.ஆர்.பாலு, ஜாபர்சேட் உரையாடலில் 2 ஜி விசாரணையில் சி.பி.ஐ. ரெய்டுகளின் நேரத்தை தி.மு.க. காங்கிரஸ் முடிவு செய்து விசாரணையை நீர்த்து போக செய்யும் வகையில் செயல்பட்டுள்ளன.

வரும் நாட்களில் இது தொடர்பாக மேலும் பல்வேறு தகவல்கள் வெளி வரும். நாளை ரெய்டுக்கு வர வேண்டாம். நாம் தயாராக இருக்கும் போது தகவல் சொல்லிவிடலாம் என்றெல்லாம் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் மூலம் எப்படியெல்லாம் வழக்கை நீர்த்து போக செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது, எனக் கூறியுள்ளார்.

Views: - 201

0

0