பிரதான கட்சிகளையே ஆட்டம் காணச் செய்தவர்… விஜயகாந்த் பிடித்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாதது : வானதி சீனிவாசன் இரங்கல்..!!

Author: Babu Lakshmanan
28 December 2023, 12:57 pm
Quick Share

திரைத்துறையில் அவர் பிடித்த இடம் என்பது யாராலும் நிரப்ப முடியாதது என்று விஜயகாந்த் மறைவுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திரைத்துறையிலும், அரசியலிலும் கேப்டன் விஜயகாந்த் பெரும் சகாப்தம். தேமுதிக தலைவர் அருமைச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், பெரும் துயரமும் அடைந்தேன். நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவரது மறைவு தாங்க முடியாத மன வேதனையைத் தருகிறது.

தமிழ்நாட்டின் கலாசார தலைநகரான மதுரையில் பிறந்து, திரைத்துறையில் போராடி பெரும் சாதனை படைத்தவர். திரைத்துறையில் அவர் பிடித்த இடம் என்பது யாராலும் நிரப்ப முடியாதது.

தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி 2006-ல் போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 8 சதவீத வாக்குகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 2006 உள்ளாட்சித் தேர்தல், 2009 மக்களவைத் தேர்தலில் தேமுதிக 10 சதவீத வாக்குகளைத் தாண்டியது. அதன் பிறகு 2016 சட்டமன்றத் தேர்தல் வரை தேமுதிகவுடன் கூட்டணி வைக்க பிரதான கட்சிகள் போட்டி போடும் நிலை ஏற்பட்டது.

உடல்நலப் பாதிப்பு காரணமாக அரசியலில் அவர் எட்ட வேண்டிய உயரத்தை எட்ட முடியவில்லை. தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டிருந்தாலும் திரைத் துறையிலும், அரசியலிலும் அவர் ஒரு பெரும் சகாப்தம் என்பதில் சந்தேகம் இல்லை. திரு. விஜயகாந்த் அவர்கள் மறைவால் வாடும் அவரது மனைவி தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா, மகன்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 232

0

0