நீலகிரியில் வாக்கு எண்ணும் மையத்தில் CCTV கேமரா செயலிழப்பு : அரசியல் கட்சிகள் அதிர்ச்சி..!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 April 2024, 9:23 pm
cc
Quick Share

நீலகிரியில் வாக்கு எண்ணும் மையத்தில் CCTV கேமரா செயலிழப்பு : அரசியல் கட்சிகள் அதிர்ச்சி..!!!

நீலகிரி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வாக்கு பெட்டிகள் உதகையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் பிரமுகர்கள் பார்க்கும் சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படாததால் கட்சி பிரமுகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. குறிப்பாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி உதகை சட்டமன்றத் தொகுதி குன்னூர், கூடலூர் (தனி), பவானிசாகர், அவிநாசி, மேட்டுப்பாளையம் ஆகிய ஆறு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஆறு நாடாளுமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகள் உதகை அருகே உள்ள காக்கா தோப்பு பகுதியில் அமைந்துள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள கட்சி பிரமுகர்கள் பார்க்கக்கூடிய 173 சிசிடிவி காட்சிகள் பயன்படாமல் இருந்து வருவதால் கட்சி பிரமுகர்களிடையே கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகத் திடம் கேட்ட போது சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என்றும் தற்போது அதனை சரி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 142

0

0