லியோ படம் பார்க்கச் சென்றவருக்கு கத்திகுத்து… தியேட்டரில் கத்தி கூச்சலிட்டதால் வந்த மோதல்.. 3 பேர் கைது!!

Author: Babu Lakshmanan
21 October 2023, 2:50 pm
Quick Share

கோவை ; மேட்டுப்பாளையத்தில் லியோ திரைப்படம் பார்க்க சென்ற போது, தியேட்டரில் கத்தி கூச்சல் விட்டதால் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அப்படத்தினை காண பொதுமக்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இத்திரைப்படம் மேட்டுப்பாளையம் சிவம் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்தப் படத்தை பார்ப்பதற்காக மேட்டுப்பாளையம் ராமேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த விஜய் (23) என்பவர் வந்துள்ளார்.

leo-updatenews360

அதேபோல, மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (21), மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியை சேர்ந்த அஸ்வின் (21), சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த மாதவன், சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் (18) ஆகியோரும் வந்துள்ளனர். படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பிரபாகரன் மற்றும் அவனது நண்பர்கள் உற்சாகத்தில் தியேட்டரில் கத்தி கூச்சல் இட்டுள்ளனர்.

இதனால், எரிச்சல் அடைந்த விஜய் பிரபாகரன் மற்றும் அவனது நண்பர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் பிரபாகரன் நண்பர்கள் மற்றும் அவரது நண்பர்களான விஜய் உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து ராமேகவுன்டன்புதூரில் இருந்து வந்த விஜயிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அருகில் இருந்தவர்கள் இவர்களை சமாதானம் படுத்தியுள்ளனர்.

இருப்பினும் படம் முடிந்து வெளியே வரும் போது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பிரபாகரன், விஜய், அஸ்வின் மற்றும் மாதவன் ஆகியோர் விஜயை கையால் அடித்து துன்புறுத்தியதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியால் முதுகில் குத்தியுள்ளனர். இதனால் விஜயக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, விஜயை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் விஜய் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கத்தியால் குத்திய பிரபாகரன், அஸ்வின், மாதவன் என 3 பேர் கைது செய்யப்பட்டு, மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய விஜய் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 302

0

0