கடலில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம்… கெடு நிர்ணயிக்கக் கூடாது ; சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி..!!

Author: Babu Lakshmanan
19 December 2023, 4:36 pm
Quick Share

எண்ணூர் கச்சா எண்ணெய் அகற்றுவதில் கெடு நிர்ணயிக்கக் கூடாது என்றும், எண்ணெயை படலத்தை அகற்றினாலும் வல்லுனர்களுடன் இணைந்து முழுமையாக அகற்றப்படும் என ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கனமழையினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள் வாகனங்களை மேயர் பிரியா கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், பணியால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிட சென்னை மாநகராட்சி சார்பில் மீட்பு உபகரணங்கள் மற்றும் போர்வை குடிநீர் ரொட்டி பால் பவுடர் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, கனமழையால் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பொருட்கள் சென்னை மாநகராட்சியில் இருந்து 100 மோட்டார் பம்புகள் தென் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்ற வகையில், முதற்கட்டமாக 100 ஹெச்பி திறன் கொண்ட 12 டீசல் பம்புகள், 50 ஹெச்பி கீழ் திறன் கொண்ட 29 டீசல் மோட்டார் பம்புகள், 30 மின் மோட்டார் பம்புகள் என 71 மோட்டார் பம்புகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும், மேலும் 29 மோட்டார் பம்புகள் அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ரொட்டி பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களும் வாகனம் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் நிவாரணப் பொருட்களை அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். கடலோர காவல்படையில் ஹெலிகாப்டர் மூலமாகவும், ஏற்கனவே தென்மாவட்டம் மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பியுள்ளதாகவும் கூறினார். சென்னை மாநகராட்சியின் சார்பில் இயந்திரப் பொறியாளர் துறையில் நான்கு செயல் பொறியாளர்கள் தலைமையிலான பதினாறு பேர் கொண்ட குழுவினரும், மின்துறையின் சார்பில் செயற்பொறியாளர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட ஒரு குழுவும் மொத்தம் 23 அலுவலர்கள் நிவாரண பணிகளுக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் இன்னும் அதிக அளவில் பணியாளர்களை அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஆணையர் ராதாகிருஷ்ணன் ;- எண்ணூர் எண்ணெய் கழிவுகள் அகற்றுவதில் மாநகராட்சி பணிகளை செய்து இருக்கிறது. 400 மருத்துவ முகாம்கள் நடத்தி இருக்கிறோம். மீன்வளம் துறை சார்பாக பாதிப்புகள் என்ன என்பதை கணக்கிட்டு இருக்கிறோம். எத்தனை நாட்கள் பணிகள் முடியும் என்பதை கணக்கிட முடியாது. ஆனால் பாதிப்புகளை முழுமையாக அகற்றிட பணிகள் நடக்க திட்டமிட்டுள்ளோம், என தெரிவித்தார்.

மீன்வளம் பாதிப்பு, வீடுகள் பாதிப்புக்கு தனியாக இழப்பீடு மாவட்ட ஆட்சியர் மூலமாக முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நீர்வள ஆதாரத்துறையுடன் மற்றும் சுற்றுச்சூழல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எண்ணூர் கச்சா எண்ணெய் அகற்றுவதில் கெடு நிர்ணயிக்கக் கூடாது, எண்ணெயை படலத்தை அகற்றினாலும் வல்லுனர்களுடன் இணைந்து முழுமையாக அகற்றப்படும். அங்கு கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் பணியாளர்கள் உள்ளனர், மேலும் மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எனவும் தெரிவித்தார்.

Views: - 214

0

0