‘எங்களை கருணை கொலை செய்யுங்க’… தேசிய கொடியை ஏந்தியபடி 10 வயது மகளுடன் காவலர் தர்ணா… சென்னையில் பரபரப்பு…!!

Author: Babu Lakshmanan
15 August 2023, 8:44 pm
Quick Share

தனது குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்தது தொடர்பான விவகாரத்தில் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டு மகளுடன் காவலர் ஒருவர் சென்னையில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், ஓட்டேரி காவல்நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் கோதண்டபாணி என்பவர் தனது 10 வயது மகளை சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால், அங்கு அவருக்கு தவறான சிகிச்சை அளித்த காரணத்தினால் மகளின் கால் பாதிக்கப்பட்டதாகக் கூறி கடந்த ஏபரல் மாதம் சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு காவலர் கோதண்டபாணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக தேசிய குழந்தைகள் ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்து 4 மாதங்களுக்கு பிறகு, தற்போது அவருடைய மகளுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்குவதாக குழந்தைகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால், இதனை ஏற்க மறுத்த காவலர் கோதண்டபாணி, சுதந்திர தினமான இன்று டிஜிபி அலுவலகத்தின் முன்பு மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் கூறியதாவது ;- மருத்துவமனை நிர்வாகம் தவறான சிகிச்சை அளித்தது குறித்து எந்த ஒரு விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை. அந்த விளக்கம்தான் எனக்கு வேண்டுமே தவிர, மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் தேவையில்லை, எனக் கூறி காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் முன்பு இன்று மகளுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், எங்கள் இருவரையும் கருணை கொலை செய்து விடுங்கள் எனவும் காவலர் கோதண்டபாணி கோரிக்கை வைத்தார். சுமார் 20 நிமிடம் தன் மகளுடன் சாலையில் தர்ணாவில் ஈடுபட்டிருந்த தலைமை காவலரை மெரினா காவல் நிலைய காவலர்கள் சாமதானம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Views: - 246

0

0