இரு சமூகத்தினரிடையே மோதல்… குடிசைகளுக்கு தீ வைப்பு : போலீஸ் குவிப்பு.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2023, 6:23 pm
Krishnairi - Udpatenews360
Quick Share

இரு சமூகத்தினரிடையே மோதல்… குடிசைகளுக்கு தீ வைப்பு : போலீஸ் குவிப்பு.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினரும், 200க்கும் மேற்பட்ட மற்ற சமூக குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சோக்காடி கிராமத்தில் ஊர் பொதுவாக மாரியம்மன் கோவில் புனரமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. அதற்காக கோவிலின் அருகே கிரானைட் கற்களை பாலிஷ் செய்யும் பணியானது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதில் கிரானைட் கற்கள் பாலிஷ் செய்யும் பொழுது அருகில் உள்ள வீடுகளில் தூசி பரவுவதால் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளுமாறு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் நிலவிய நிலையில் சோக்காடி பகுதியைச் சேர்ந்த அதிமுக.,வின் ஒன்றிய செயலாளர் ராஜன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.


அந்த சமயம் சோக்காடி ராஜனுக்கும் பட்டியல் இன சமூக மக்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் சோக்காடி ராஜனை தாக்கியதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் அதிகரித்த நிலையில் நள்ளிரவில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டும், பட்டியல் இன மக்களின் வீடுகள் மீது கற்களை வீசி தாக்கியும் அங்கிருந்த ஓலைகளுக்கு தீ வைத்தும் தகராறில் ஈடுபட்டனர். இதனால் சோக்காடி பகுதியே பெரும் பதற்றத்துடன் காணப்பட்டது.

இதை எடுத்து கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. தலைமையிலான ஏராளமான போலீசார் சோக்காடி பகுதியில் குவிக்கப்பட்டு இரு பிரிவினர் இடையேயும் சமூக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இருப்பிட பிரிவினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் ஒரு தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு வராத காரணத்தால் மேலும் பதட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் பட்டியலின சமூக மக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட காரணத்தினால் மாற்று சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சொக்காடி கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த மோதலில் 8 பேர் காயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Views: - 323

0

0