இரு காட்டு யானைகளுக்கு இடையே சண்டை… திடீரென சுருண்டு விழுந்த ஆண் யானை ; கோவை வனப்பகுதியில் சோகம்!!

Author: Babu Lakshmanan
30 December 2023, 12:34 pm
Quick Share

கோவை மருதமலை அண்ணா பல்கலைகழகம் அருகே உள்ள வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகளிடையே ஏற்பட்ட மோதலில் ஆண் யானை ஒன்று உயிரிழந்தது.

கோவை தடாகம் வனப்பகுதியில் இருந்து மருதமலை வனப்பகுதி வழியாக தினமும் காட்டு யானைகள் இடம் பெயர்ந்து வருகிறது. இந்த நிலையில் மருதமலை அருகே உள்ள அண்ணா பல்கலைகழகம் பின்புறம் உள்ள வனப்பகுதியில் நேற்று ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாக கோவை வனச்சரக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். முதல் கட்ட ஆய்வில் உயிரிழந்த ஆண் யானையின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவ குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு உயிரிழந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் உயிரிழந்த யானை மற்றொரு யானையுடன் ஏற்பட்ட மோதலில் உடலில் காயங்கள் ஏற்பட்டு, அதனால் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என கால்நடை மருத்துவ குழுவினர் தகவல் தெரிவித்தனர்.

Views: - 238

0

0