பிரதமர் மோடிக்கு ஏன் திடீர் நியாபகம்… ? இந்திரா காந்தி இல்லேனா எம்ஜிஆரே இல்ல ; காங்., எம்பி திருநாவுக்கரசர்…!!

Author: Babu Lakshmanan
29 February 2024, 3:00 pm
Quick Share

எம்ஜிஆர் ஜெயலலிதாவை பிரதமர் மோடி புகழ்ந்து பேசியதை எதார்த்தமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று காங்., எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் ரயில்வே திட்டங்கள் குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் மதுரை ரயில்வே நிலைய அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M குமாா், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேசியதாவது :- எம்பிக்களுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ரயில்வே போர்டு உறுப்பினர் பங்கேற்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளேன். பட்டுக்கோட்டை வழியாக இராமேஸ்வரம் – சென்னைக்கு நாள்தோறும் கூடுதலாக ஒரு ரயில் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் ஒதுக்கிய நிதி குறித்த பட்டியலை புள்ளி விபரத்துடன் வெளியிட வேண்டும்.

ஒரு பேச்சாளர் பேசுவதைப் போல நிதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் பொத்தாம் பொதுவாக பேசியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சாமி தரிசனம் செய்த பிரதமர் கட்டிட பணியை துவக்கி வைக்கவில்லை? இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஏதும் பேசவில்லை.

தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் அரசியல் பேசி வருகிறார். 10 ஆண்டுகளாக ஞாபகம் வராத எம்ஜிஆர் ஜெயலலிதா தற்போது பிரதமருக்கு ஞாபகம் வந்துள்ளது. 10 ஆண்டுகளாக எம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டாத பிரதமர் தற்போது இருவரையும் பாராட்டி பேசி உள்ளார்.

எம்ஜிஆர் உடல்நலம் குன்றிய நிலையில் இந்திரா காந்தி ஏற்பாட்டில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லப்பட்டார். இந்திரா காந்தி எம்ஜிஆரை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றதால் கூடுதலாக மூன்று வருடம் உயிரோடு இருந்தார். உடல் நலம் குன்றிய ஜெயலலிதாவை மோடி நினைத்திருந்தால் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கலாம்.

பிரதமர் எம்ஜிஆர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியதை எதார்த்தமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதிமுக பாஜகவின் கூட்டணியில் இல்லாத காரணத்தால் வாக்குக்காக எம்ஜிஆர் ஜெயலலிதாவை பிரதமர் புகழ்ந்து பேசுகிறார், எனக் கூறினார்.

Views: - 159

0

0