பைக் திருட்டு வழக்கில் சிக்கிய கவுன்சிலர் : பல வருடமாக திருட்டில் ஈடுபட்டது அம்பலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2023, 4:57 pm
Councilor Arrest - Updatenews360
Quick Share

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கனிராஜ் (48). அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். இவர் கடந்த மே 28ம்தேதி தனது வீட்டு முன் பைக்கை நிறுத்தியிருந்தார். மறுநாள் பார்த்த போது பைக்கை காணவில்லை. யாரோ திருடிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து கனிராஜ், கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச்சேர்ந்த மணிகண்டன் மகன் சக்திகணேஷ் (22) என்பவர் பைக்கை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த சக்திகணேஷ்சை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பைக் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும் சக்திகணேஷ், மதுரையில் இரண்டு இடங்களில் பைக் திருடியது தெரிய வந்தது.

இந்த மூன்று பைக்குகளில் ஒரு பைக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரத்தைச் சேர்ந்த ராஜா (46) என்பவரிடம் விற்றுள்ளார். அவர், அங்குள்ள பேரூராட்சியின் 2வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருப்பதும், முன்னாள் பேரூராட்சி சேர்மனாக இருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Views: - 289

0

0