கல்லூரியில் போதையில் மாணவர்கள் ரகளை … பதறிப் போய் வந்த மாணவனின் தந்தை மீதும் தாக்குதல் : அரசுக் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
18 March 2023, 2:32 pm
Quick Share

கடலூரில் அரசு கல்லூரியில் போதையில் மாணவர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் அரசு கொளஞ்சிப்பர் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தின் பின்புறம், இயற்கை உபாதை கழிப்பதற்காக, இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி கணிதம் படிக்கும் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் சென்று உள்ளனர்.

அப்போது, கல்லூரி வளாகத்திற்குள் மது குடித்துக் கொண்டும், கஞ்சா போதையில் இருந்த இரண்டு வெளிநபர்கள், கல்லூரி மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் போதையில் இருந்த இரண்டு நபர்களும், கல்லூரி மாணவன் ஆகாஷை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

அதனை தட்டிகேட்ட சக மாணவர்களையும் தாக்கியுள்ளனர். பின்னர், கல்லூரி மாணவர்களிடம் போதையில் இருந்த இளைஞர்கள், ‘உன்னை அழைத்துப் போக யாரையாவது வரச்சொல்,’ என மிரட்டி உள்ளனர். இதனால் அச்சமடைந்த கல்லூரி மாணவன் ஆகாஷ் தனது தந்தைக்கு செல்போன் மூலம் தகவல் அளித்து வர சொல்லி இருக்கிறார்.

தகவல் இருந்து வந்த கல்லூரி மாணவனின் தந்தை பாலு, சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றபோது, அவரையும் போதையில் இருந்த நபர்கள் தாக்கியுள்ளனர்.

இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம் விருத்தாச்சலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில், விரைந்து வந்த காவல்துறையினரை கண்டதும் போதையில் இருந்த நபர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடிள்ளனர். இதுகுறித்து விருத்தாச்சலம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து, கல்லூரி மாணவர்களை தாக்கிய போதை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்குவதும், ஆபாசமாக திட்டும் வீடியோவை கல்லூரி மாணவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் கல்லூரி மாணவன் ஆகாஷின் தந்தையான பாலு என்பவர், விருத்தாச்சலம் நகரத்தின் 11-வது வார்டு திமுக கவுன்சிலரான உஷா என்பவரின் கணவர் ஆவார்.

1000-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலக்கூடிய விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில், போதிய பாதுகாப்பு இல்லை எனவும், கல்லூரி நேரங்களில் சமூக விரோதிகள் கஞ்சா மற்றும் மது போதையில், கல்லூரிக்குள் புகுந்து மாணவிகளை கிண்டல் செய்வதும், கல் எரியும் சம்பவமும் அரங்கேறி வருவதால், கல்லூரி சுற்றி சிசிடிவி கேமரா மற்றும் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைக்கிறனர்.

Views: - 280

0

0