‘ஓம் ரஜினியே போற்றி’… கோவில் கட்டி சிலை வைத்த தீவிர ரசிகன்… தினமும் குடும்பமே வழிபாடு நடத்தும் விநோதம்..!!

Author: Babu Lakshmanan
26 October 2023, 6:06 pm

மதுரையில் மூன்றடி உயரத்தில் 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட ரஜினி சிலையை பிரதிஷ்டை செய்து ரசிகர் ஒருவர் வழிபாடு நடத்தும் விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கார்த்திக் என்ற இளைஞர் திருமண தகவல் மையம் தொழில் நடத்தி வருகிறார். இவர் தீவிர ரஜினி ரசிகர் ஆவார். இந்நிலையில், வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வரும் கார்த்திக், தனது வீட்டின் ஒரு அறையை ரஜினிக்கு கோவிலாக வடிவமைக்கப்பட்டு, ரஜினியின் திரைப்படங்கள் அனைத்திலும் உள்ள காட்சிகளை அறையினுள் ஒட்டி வைத்தும், நாள் தோறும் ரஜினிக்கு தீபாராதனை, அபிஷேகம் செய்து வருகிறார்.

ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் மூன்றடி உயரத்தில் 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட ரஜினி சிலையை தயாரித்து, இன்று அந்த சிலைக்கு வேத விற்பன்னர்களால் யாகம் வளர்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவது போன்று ரஜினி சிலைக்கு பூஜைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, பூஜை முடிந்த பின்னர் அச்சிலையை எடுத்து கோவிலாக வழிபடும் அந்த அறையில் வைத்து, பால், பன்னீர் , இளநீர், சந்தனம் , மஞ்சள் உள்ளிட்ட ஆறு வகை திரவியங்களால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து தீபாராதனை நடத்தினார் ரசிகரான கார்த்திக். அவருக்கு உறுதுணையாக பெற்றோர்களும், அவரது மனைவியும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே உயிருடன் இருக்கும் நடிகருக்கு கருங்கல்லினால் ஆன சிலையை அமைத்து, நாள்தோறும் அதற்கு அபிஷேகமும் , தீபஆராதனைகளும் செய்து வரும் கார்த்திக்கின் செயல் வினோதமானதே.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!