தமிழன்னைக்கு அவமரியாதை…அகோரமாக சித்தரித்து இணையத்தில் வெளியீடு: இசையமைப்பாளர் ரஹ்மான் மீது போலீசில் புகார்..!!

Author: Rajesh
13 April 2022, 1:34 pm
Quick Share

சென்னை: இழிவாக வரையப்பட்ட தமிழன்னையின் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இசையமைப்பாளர் ரஹ்மான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வசிப்பவர் முத்து ரமேஷ் நாடார். அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி நிர்வாகியான இவர் ‘ஆன்லைன்’ வாயிலாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழன்னைக்கு கோவில் கட்டி சிலை அமைத்து தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

தமிழறிஞர்கள் பலர் தமிழன்னை படங்களை அழகா தெய்வமாக வெளியிட்டுள்ளனர். அவற்றில், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேலை, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, வளையாபதி போன்ற நுால்கள் தமிழன்னையின் கரங்களில் செங்கோல்களாய் காட்சி அளிக்கின்றன.

ஆனால், இசையமைப்பாளர் ரஹ்மான் தலைவிரி கோலத்துடன் இருப்பது போன்ற படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இது, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை கொச்சைப்படுத்தும் செயல். தமிழர்கள் தெய்வமாக வழிபடும் தமிழன்னையின் கொச்சையான படத்தை வெளியிட்ட இசையமைப்பாளர் ரஹ்மான் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

Views: - 858

1

0