உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதில் விரோதம் : திமுக வட்டச்செயலாளர் கொலை சம்பவம்.. 2 பேர் கைது

Author: Babu Lakshmanan
3 February 2022, 9:10 am
Quick Share

சென்னை : சென்னை மாநகராட்சி தேர்தலில் தனது மனைவியை போட்டியிடச் செய்ய முயன்ற திமுக பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்ற சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மடிப்பாக்கம் 188வது திமுக வட்டச் செயலாளராக இருந்தவர் செல்வம் (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 188வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தனது மனைவியை திமுக சார்பில் போட்டியிட செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இது தொடர்பாக ராஜாஜி சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் செல்வம் நேற்று முன்தினம் இரவு ஆலோசனை நடத்தி வந்தார்.

அப்போது, 3 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல், செல்வத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்ததுடன், சம்பவ நிகழ்ந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

திமுகவில் போட்டியிடுவதில் ஏற்பட்ட விரோதம் காரணமாக கட்சியின் நிர்வாகி கொலை செய்யப்பட்டிருப்பது சக கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலை செய்யப்பட்ட வழக்கில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராதாகிருஷ்ணன், தனசீலன் ஆகிய இருவரிடம் கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Views: - 1366

0

0