மயான பூமியை கூட விட்டுவைக்கல.. அடக்கம் செய்யும் இடத்தை ஆக்கிரமித்து அலுவலகம் அமைத்த திமுக? பொதுமக்கள் எதிர்ப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2023, 5:33 pm
DMK office 1- Updatenews360
Quick Share

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது பொங்கலூர் ஒன்றியம். இப்பகுதிக்குட்பட்ட மாதப்பூர் ஊரட்சியில் திடீரென திமுக கொடி மற்றும் தோரணத்துடன் அலுவலகம் திறக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதப்பூர் ஊராட்சி தலைவராக பாஜகவை சேர்ந்த அசோக்குமார் தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வந்த நிலையில் மாதப்பூர் கிராமத்தில் பேருந்து நிலையம் பின்புறம் இன்று காலை திமுக தோரணம் மற்றும் கட்சிக்கொடி கட்சி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த கட்டிடம் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் நூலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டிடம் அமைந்த பகுதி க.ச.எண் 98/1 ல் அமைந்துள்ளதாக வருவாய் துறை பதிவேட்டில் உள்ளது.

சுமார் 4. 48 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பூமி மயான பூமி ஆகும். மயான பூமியில் வேறு பயன்பாட்டிற்கு அரசு அனுமதி கொடுப்பதில்லை.

இந்நிலையில் ஆளும் கட்சியில் கொடி மற்றும் தோரணத்தை கட்டி ஆக்கிரமிப்பு செய்தால் யாரும் கேட்கமாட்டார்கள் என்கிற தைரியத்தில் இது போன்று செயலில் ஈடுபட்டது யார்?

மயான பூமியில் மையம் கொண்டிருக்கும் கட்டிடம் திமுக அலுவலகமா? அல்லது திமுக கட்சி அடையாளத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டனரா? கொந்தளிக்கும் பொதுமக்களுக்கு பதில் இல்லை.

வி.ஏ.ஓ அலுவலக ஜன்னலை திறந்துபார்த்தாலே ஆக்கிரமிப்பு இடம் தெளிவாக தெரியும். ஆனால் விடுமுறை நாட்களை பயன்படுத்தி இது போன்ற கட்டிடத்தை கட்டியுள்ளனர்.

ஆளும் கட்சி அடையாளத்துடன் இது போன்று ஆக்கிரமிப்பை மேற்கொண்டால் மயான பூமி விரைவில் மாயமாவது உறுதி….. இது குறித்து பல்லடம் தாசில்தாரிடம் கேட்டதற்கு, முறையாக ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் பொங்கலூர் ஒன்றிய சேர்மன் குமாரிடம் கேட்டதற்கு திறக்கப்பட்டது டீக்கடை என்றும் ஏற்கனவே 10 ஆண்டுகளாக அனுபவத்தில் உள்ளதாகவும் ஒப்புக்கொண்டார்.

மேலும் சம்பந்தப்பட்ட மாதப்பூர் கிளை நிர்வாகி கிட்டுச்சாமியிடம் கேட்டதற்கு தான் திறக்கவில்லை எனவும், வேறு ஆட்கள் தான் திறந்ததாக கூறினார்.

Views: - 715

0

0