மண் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர்… கழுத்தை பிடித்து கடித்து கொலைவெறி தாக்குதல்.. திமுக ஊராட்சிமன்ற தலைவர் உள்பட இருவர் கைது…!!

Author: Babu Lakshmanan
29 May 2023, 1:49 pm
Quick Share

திருச்சி அருகே மண் கடத்தலை பிடிக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக திமுக ஊராட்சிமன்ற தலைவர் உட்டட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரெங்கநாதபுரத்தை பரமதயாளன் மகன் பிரபாகரன் (36). இவர் துறையூர் உட்பட பதினாறு கிராமங்களுக்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு நரசிங்கபுரம் கிராமம் அருகே பச்சைமலை அடிவாரம் அரசு புறம்போக்கு நிலத்தில் மண் கடத்துவதாக துறையூர் தாசில்தார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தாசில்தார் வனஜா உத்தரவின்படி வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். பச்சமலை அடிவாரத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் ஒரு ஜேசிபி, மற்றும் ஒரு டிராக்டர் ஆகியவற்றுடன் மண் ஏற்றி கொண்டு இருந்தது தெரியவந்தது.

உடனடியாக வண்டியின் சாவியை எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் மற்றும் ஜேசிபி உரிமையாளர் தனபால், மணி ஆகிய மூன்று பேரும் வருவாய்துறை அதிகாரியை வழிமறித்து கொலை வெறி தாக்குதல் செய்துள்ளனர்.

மேலும், கற்களாளும், கையாளும் கடுமையாக தாக்கி உள்ளனர். கழுத்தின் பின்புறம் மணி என்பவர் கொடூரமாக கடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிரபாகரன் அங்கிருந்து தப்பி துறையூர் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையில் இருந்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாசில்தார் வனஜா மற்றும் துறையூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேரில் சென்று விசாரணை செய்தனர்.

இது குறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் (45), ஜேசிபி டிரைவர் தனபால் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள மணியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதனிடையே, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து வரும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கலந்து கொண்டனர். நேற்று மணல் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை தாக்கிய திமுக ஊராட்சிமன்ற தலைவர் உள்பட 4 பேருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கருப்பு பேட்ச் அணிந்து பங்கேற்றனர்.

Views: - 288

0

0