திமுக ரவுடிகளை வைத்து ஆட்சி நடத்துவது நீண்ட காலம் நிலைக்காது.. திருப்பி அடிச்சா நிலைமை மோசமாகும் : அண்ணாமலை கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2023, 12:50 pm
DMK An -Updatenews360
Quick Share

திமுக ரவுடிகளை வைத்து ஆட்சி நடத்துவது நீண்ட காலம் நிலைக்காது.. திருப்பி அடிச்சா நிலைமை மோசமாகும் : அண்ணாமலை கண்டனம்!

பெரம்பலூர் கல் குவாரி ஏலத்தில் பங்கேற்பதற்கு, விண்ணப்பிக்க வந்த பா.ஜ., பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது, போலீஸ் முன்னிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் பெரம்பலுார் தி.மு.க., எம்.எல்.ஏ.,வின் பி.ஏ.,க்கள் உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் பா.ஜ., பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல் நடத்தியதற்கு தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு நடைபெற இருந்த ஏலத்தில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி கொடுக்க வந்த பெரம்பலூர் கவுல்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் பாஜ., தொழில்துறை பிரிவு மாவட்டத் துணைத் தலைவருமான கலைச்செல்வன் மற்றும் தொழில்துறை பிரிவு மாவட்டத் தலைவரான முருகேசன் ஆகியோரை திமுக ரவுடி கும்பல் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும், திமுகவினரைத் தடுக்க முயற்சித்த, கனிம வளத்துறை துணை இயக்குனர் ஜெயபால் மற்றும் உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் குமரிஆனந்தன் ஆகிய அரசு அதிகாரிகளையும், பாதுகாப்பு பணியிலிருந்த டிஎஸ்பி பழனிச்சாமி உள்ளிட்ட போலீசாரும் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மாவட்ட கலெக்டர் நேரடியாக வந்து எச்சரிக்கை விடுத்த பிறகும், திமுக ரவுடி கும்பல் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர், அவரது அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்படும் அளவுக்கு ஏற்கனவே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலேயே, அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்கு, திமுகவினர் கொண்டு வந்துள்ளனர்.

திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. மாவட்ட கலெக்டருக்கும் கூட இந்த ரவுடி கும்பல் கட்டுப்படவில்லை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலைமையை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.

ரவுடிகளை வைத்து ஆட்சி நடத்துவது நீண்ட காலம் நிலைக்காது. பொதுமக்கள் திருப்பி அடித்தால், திமுக ரவுடி கும்பல் முழுவதுமாகக் காணாமல் போக நேரிடும் என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்ந்திருக்க வேண்டும்.

உடனடியாக, கலெக்டர் அலுவலகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட திமுக ரவுடிகளைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜ., சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Views: - 233

0

0