“ஊழியர்களை பங்குதாரர்களாக சேர்த்தது வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது” : ஈஷா நிகழ்ச்சியில் உஜ்ஜீவன் வங்கி நிறுவனர் சிறப்புரை!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2023, 11:24 am
Isha- Updatenews360
Quick Share

“எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை வெறும் வளமாக பார்க்காமல், அவர்களை நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் சேர்த்து கொண்டோம். இது எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது” உஜ்ஜீவன் ஸ்மால் பினான்ஸ் வங்கியின் நிறுவனர் சமித் கோஷ் தெரிவித்தார்.

ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ‘மனிதன் – ஒரு வளம் அல்ல’ (Human Is Not A Resource – HINAR) என்ற தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சியின் 7-ம் ஆண்டு நிகழ்வு கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 9) தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு வர்த்தக தலைவர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முதல் நாளில் ‘நிறுவனத்தின் கலாச்சாரத்தை கட்டமைப்பது’ குறித்து பங்கேற்பாளர்களுக்கு வல்லுநர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அதில் குறிப்பாக, உஜ்ஜீவன் ஸ்மால் பினான்ஸ் வங்கியின் நிறுவனர் சமித் கோஷ் அவர்கள் பேசும் போது, “பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், கட்டுபாட்டாளர்கள், நாம் பணியாற்றும் சமூகம் என நம்மோடு இருக்கும் அனைத்து பங்குதாரர்களிடமும் நாம் சமமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். இதற்காக, நாங்கள் நிறுவனத்தில்
“எம்ப்ளாயி ஸ்டாக் ஆப்ஷன் ப்ளான்” என்ற பெயரில் நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினோம். நாங்கள் எங்கள் ஊழியர்களை வெறும் வளமாக மட்டும் பார்க்காமல் அவர்களை பங்குதாரர்களாக இணைத்து கொண்டோம். இதன்மூலம், ஊழியர்களிடம் அவர்களும் இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்ற மனநிலையை உருவாக்க முடிந்தது. இது அவர்களுக்கு ஒரு உற்சாகத்தை அளித்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருந்தது. இதனால், ‘வேலை செய்வதற்கான சிறந்த இடம்’ என்ற 100 நிறுவனங்களின் பட்டியலில் எங்கள் நிறுவனம் இடம்பெற்று வருகிறது” என்றார்.

ஐஐம் பெங்களூருவின் டிஜிட்டல் லேர்னிங் துறையின் தலைவரும், மனித வள மேலாண்மை துறை பேராசிரியருமான திருமதி. வசந்தி ஸ்ரீனிவாசன் அவர்கள் புகழ்பெற்ற வெவ்வேறு பிராண்டுகள் மற்றும் அதன் கலாச்சார கட்டமைப்பு குறித்து பங்கேற்பாளர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசும் போது, “கலாச்சாரம் குறித்து பேசும் போது முதலில் புரிந்து கொள்ள வேண்டியது, நல்ல கலாச்சாரம் அல்லது கெட்ட கலாச்சாரம் என்ற ஒன்று இல்லை. பொருத்தமான கலாச்சாரம் மற்றும் பொருத்தமற்ற கலாச்சாரம் என்பது மட்டுமே உண்டு” என்றார். மேலும், “கலாச்சாரம் என்பது ஒரு முழுமையான உள் பண்பு. நிறுவனத்தின் பிம்பம் மற்றும் அடையாளம் அந்நிறுவனத்தின் கலாச்சாரத்தால் தான் கட்டமைக்கப்படுகிறது” என்றார்.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் வாரிய உறுப்பினர் திரு. அமித் அஞ்சால் அவர்கள் தன்னுடைய தொழில் வாழ்கை பயணத்தையும், பின்பு ஏர்டல் மற்றும் ஓலா நிறுவனத்தில் அவருக்கு நேர்ந்த மாற்றங்கள் குறித்தும் பேசினார். திரு அஞ்சல் அவர்கள் பேசுகையில் “ஒரு தலைவராக அல்லது ஒரு தொழில் முனைவராக நாம் கொண்டிருக்கும் நோக்கத்தில் நாம் மிக உறுதியாக இருக்கிறோம். நாம் அதை பற்றி மிக மிக உற்சாகமாகவும் உணரலாம். அதேசமயம், நம்முடைய நோக்கத்தை நம் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு எந்தளவிற்கு புரிய வைக்கிறோம் என்பதை பொறுத்து நம் வெற்றி இருக்கும்” என்றார்.

அவரை அடுத்து, சென்ட்ர ஆப் ஸ்ட்ரடெஜிக் மைன்ட்செட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனரும் ஆன திரு. ஹிமான்ஷூ சாக்சேனா பேசுகையில், “கலாச்சாரம் என்பது நம்பிக்கைகள், வணிக நடைமுறைகள் மற்றும் நடத்தைகளின் கலைவையாகும்” என்றார்.

நிகழ்வின் 2-வது மற்றும் 3-வது நாட்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் திரு. எஸ். சோமநாத், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனுராதா ராஸ்தன், யூனிலீவர் தென் ஆசியாவின் முதன்மை மனித வள அதிகாரி, டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. பிரதிக் பால், மஹிந்த்ரா பர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. அசுதோஷ் பாண்டே மற்றும் ஈஷா லீடர்ஷிப் அகாடமியின் மெளமிதா சென் சர்மா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

12 ஆண்டுகளுக்கு முன்பு, சத்குரு அவர்கள் ஈஷா லீடர்ஷிப் அகாடமி என்ற அமைப்பை நிறுவினார். நல்வாழ்விற்கான கருவிகளுடன் வெளிப்புற திறனையும் இணைத்து உயர்தரமான தலைமைத்துவ கல்வியை வழங்குவதே இந்த அமைப்பின் நோக்கமாகும். தலைமைத்துவதை உள்ளார்ந்த பண்பாக மற்றும் உள்ளுணர்வு மிக்க பண்பாக வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது இந்த அமைப்பு. வெளிப்புற சூழலை மற்றும் வெளியே இருக்கும் மக்களை நிர்வகிப்பதற்கு முன்பாக ஒருவர் தன் சொந்த மனம், உடல் மற்றும் ஆற்றலை நிர்வகிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதே இதன் கொள்கையாகும்.

Views: - 169

0

0