புதியதாக வாங்கிய காரில் கோவிலுக்கு சென்ற குடும்பம் : நின்றிருந்த லாரி மீது மோதிய விபத்தில் 2 குழந்தைகள் பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 March 2022, 9:45 am
Accident - Updatenews360
Quick Share

கோவை : கே.ஜி.சாவடி அருகே கேரளாவில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற ஆம்னி வேன், சாலை ஓரத்தில் இருந்த லாரி மீது மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் நிசார் அலி. இவர் அண்மையில் செகனண்ட் கார் வாங்கியதாக தெரிகிறது. இதனால் அந்த காரை எடுத்துக் கொண்டு நிசார் அலி மற்றும் அவரது நண்பர் ராமச்சந்திரன் என்பவரது குடும்பத்துடன் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியிலுள்ள தர்காவிற்கு சென்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து வடகரை பகுதியில் உள்ள நரசிம்மர் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் கேரளாவிலிருந்து கோவை வழியாக ஈரோட்டிற்கு கிளம்பியுள்ளனர். அப்போது ஆம்னி வேன் வாளையாறு அடுத்த கே.ஜி சாவடி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் வந்த 3 வயது சிறுவன் மித்ரன், 5 வயது சிறுமி அஞ்சுதா ஸ்ரீ, ஆகிய இரு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த மோனிஷ், ராமச்சந்திரன், சரிதா, நந்திதா, அக்ஷயா, காஞ்சனா குமாரி, இந்துமதி ஆகியோர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் காரில் வந்த நிசார் அலி லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். புதிதாக வாங்கிய காரில் கேரளா சென்று வந்தபோது ஏற்பட்ட விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 930

0

0