முதலமைச்சரை தள்ளிவிட்ட பாதுகாப்பு அதிகாரி… ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி… இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு..!!

Author: Babu Lakshmanan
14 June 2022, 2:40 pm

முதலமைச்சரை தள்ளிவிட்ட பாதுகாப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வவுச்சர் ஊழியர்களுக்கும், போலீசாருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வில்லியனூர் பகுதியில் உள்ள திருக்காமேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவின்போது, உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாப்பு அதிகாரியான ராஜசேகர் என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி நிலை தடுமாறி முதல்வர் ரங்கசாமியை தள்ளிவிட்டார்.

இந்நிலையில் முதல்வர் ரங்கசாமியை தள்ளிவிட்ட பாதுகாப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்ககோரி புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிபுரியும் 20 க்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்ததால் இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து தடையை மீறி ஆளுநர் மாளிகை வாயில் முன்பு முற்றுகையிட முயன்றதால் போலீசாருக்கும், வவுச்சர் ஊழியர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது. தொடர்ந்து, முற்றுகையில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் சமாதானப்படுத்தி கலையச் செய்தனர்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்