ரெண்டு வருஷமா தொழிலாளர்களுக்குனு ஏதாவது நல்லது செஞ்சீங்களா? திமுக அரசுக்கு கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2023, 6:22 pm
CITU - Updatenews360
Quick Share

சிஐடியு வின் தமிழ்நாடு மாநில குழு கூட்டம் காஞ்சிபுரம் யாத்ரி நிவாஸின் புதிய கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் அ.சௌந்தராஜன் , மாநில பொது செயலாளர் ஜி.சுகுமாரன், மாநில செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக தொழிலாளர் பிரச்சனைகள், அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாநில அரசு பணிகள், போக்குவரத்து பணிகள், மாநகராட்சி, நகராட்சி ,உள்ளாட்சி மற்றும் மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவுட் சோர்சிங் முறையில் தான் ஆட்கள் தேர்வு செய்யப்படும், நிரந்தர பணியாட்கள் எடுக்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேபோல் அரசாணை எண் 119, 10, 152 போன்ற அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. அவை அனைத்தும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது என்றார்.

தமிழக அரசின் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் இதுவரையில் நிறைவேற்றவில்லை. குறிப்பாக தொழிலாளர்களுக்கு எதுவும் செய்து தரவில்லை.

அரசு அலுவலங்களில் பத்து வருடமாக ஒப்பந்த பணியாற்றுபவர்களை நிரந்தமாக்குவோம் என கூறியதும் நிறைவேற்றவில்லை. சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியும் நிறைவேற்றபடவில்லை.

அனைத்து தரப்பினரும் சந்தோஷ படும்படியான வாக்குறுதியை தேர்தல் நேரத்தில் அளித்துவிட்டு எதையுமே இரண்டு வருடம் ஆகியும் நிறைவேற்றவில்லை என்பதால் போக்குவரத்து தொழிலாளர்களும் மக்களும் கோபத்தில் உள்ளார்கள்.

ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.பஞ்சப்படி போன்ற எதுவும் அளிக்கவில்லை .அகவிலைப்படி அளித்து விடுவோம் என தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்து இருந்தார்கள் .ஆனால் இதுவரையில் நிறைவேற்றவில்லை.

தொழிலாளர்கள் விரோத நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடக்கூடாது. இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணத மாநில அரசை கண்டித்து மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை 8 முனைகளிலிருந்து துவங்கி 2400 கிலோமீட்டர் நடைபயணம் செய்து திருச்சியில் முடிவு செய்ய உள்ளோம்.

சுகாதாரம், கல்வி,விவசாயம், வேலைவாய்ப்பு இன்மை, விலைவாசி போன்றவைகளில் அரசு கவனம் செலுத்தவில்லை என்பதை வலியுறுத்தி நாங்கள் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.

தமிழகத்தில் மீண்டும் ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியில் உறுதி அளித்து இருந்த தமிழக முதல்வர் தற்போது முடியாது எனக் கூறுகின்றார். இதனையே நிதி அமைச்சரும் தொடர்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் நாட்டு மக்களுக்கு எதையும் செய்யவில்லை குறிப்பாக தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட எதையுமே செய்யாததால் தொழிலாளர்களும் பொதுமக்களும் கடும் கோபத்தில் உள்ளனர் என தமிழக அரசை கடுமையாக குற்றம் சாட்டினார்.

Views: - 303

1

0