எங்களுக்கே புரோட்டோ இல்லை-யா’.. ஓட்டல்காரரை புரட்டி எடுத்த ரவுடிக்கும்பல் ; கதிகலங்க வைக்கும் சிசிடிவி காட்சி!

Author: Babu Lakshmanan
26 January 2024, 1:37 pm
Quick Share

இரவு நேரத்தில் பரோட்டா கேட்டு ஓட்டல்காரரை பந்தாடிய ரவுடி கும்பலில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள சாயல்குடியில் கன்னியாகுமரி சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உணவகம் நடத்தி வருபவர் சிக்கல் பகுதியை சேர்ந்த அப்துல் லத்தீப். இவர் கடந்த 21 ந்தேதி இரவு வழக்கம் போல் தன்னுடைய கடையில் வியாபாரம் முடித்து விட்டு, இரவு சுமார் 10.30 மணிக்கு மேல் கடையை அடைக்க ஆயத்தமாகியுள்ளார்.

அப்போது, மது போதையில் நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து ‘கடையை அடைக்காதே, ‘எங்களுக்கு புரோட்டா தந்துவிட்டு அப்புறமாக அடைத்துக் கொள்’ என்று மிரட்டி உள்ளனர்.

ஆனால், அவர் கடையில் இருந்த அனைத்து உணவு பண்டங்களும் விற்று தீர்ந்து விட்டது. தற்போது கடையை அடைக்கும் நேரம் என்பதால் உங்களுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். இதனால், அந்த ரவுடி கும்பல் ஆத்திரமடைந்து ‘நாங்க யார்னு தெரியுமா..எங்களுக்கே புரோட்டா இல்லைனு சொல்லுவியா’ என ஆவேசத்துடன், அவரை அவரது கடைக்குள் இருந்த விறகு கட்டை மற்றும் பெரிய சைஸ் கரண்டியை கொண்டு தாக்கி பந்தாடியுள்ளனர்.

மேலும் தோளில் தூக்கி ஒருவருக்கு ஒருவர் பந்து போல் தூக்கி வீசி பந்தாடி எச்சில் இலை போடும் தொட்டியில் போட்டு அடித்து துவைத்துள்ளனர். மேலும், அங்கிருந்த கல்லாப்பெட்டியை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்த அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இது தொடர்பாக சாயல்குடி காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை கொடுத்து, அதே பகுதியை சேர்ந்த ரவுடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க முறையாக புகார் அளித்தும் கிட்டத்தட்ட ஒரு வார காலம் ஆகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

போதையில் வந்த ரவுடி கும்பல் கடை சாத்தும் நேரத்தில் வந்து வியாபாரியிடம் தகராறு செய்து கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் சாயல்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவத்தால் வியாபாரிகள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகள் காண்போரை குலை நடுங்க செய்கிறது.

உரிய சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் இதுவரை, சாயல்குடி காவல்துறை குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் தாழ்த்துவதற்கு காரணம் தெரியவில்லை என வியாபாரிகள் புலம்புகின்றனர். எனவே, புதிதாக மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் சந்தீப் IPS இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறு வணிகர்களும் வர்த்தகர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Views: - 1410

0

0