சாப்பாட்டில் ஸ்டாப்ளர் பின்… தட்டிக்கேட்ட வாடிக்கையாளர் ; தரக்குறைவாக பேசி தாக்கிய ஓட்டல் உரிமையாளர்..!!

Author: Babu Lakshmanan
14 November 2023, 9:51 pm
Quick Share

திருவாரூரில் சாப்பாட்டில் ஸ்டாப்லர் பின் இருந்தது குறித்து கேள்வி கேட்ட வாடிக்கையாளர் ஓட்டல் உரிமையாளர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அழகிரி நகர் பகுதியில் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் திருவாரூர் அருகே உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது தாய் மகாலட்சுமி என்பவர் தீபாவளிக்கு முந்தைய நாள் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீகணேஷ் ஹோட்டலில் தக்காளி சாதம் பார்சல் ஒன்றை தனது மகனுக்காக வாங்கியுள்ளார்.

அந்த தக்காளி சாதத்தை பிரித்து சந்தோஷ் சாப்பிட்ட போது, அதில் ஸ்டாப்ளர் பின் இருந்துள்ளது. இதனையடுத்து, தனது அம்மாவிடம் எந்த கடையில் வாங்கியது என்பதை விசாரித்துவிட்டு, அந்த கடைக்கு சாப்பாடு பொட்டலத்துடன் சென்று உரிமையாளரிடம் அதை காட்டி, அவர் நியாயம் கேட்டுள்ளார். அதற்கு உரிமையாளர் தங்கள் கடையில் பின் எல்லாம் கிடையாது என்று கூறி சாப்பாடு பொட்டலத்தை குப்பைத் தொட்டியில் போட்டதுடன், சந்தோஷை தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை வீடியோவாக எடுத்த சந்தோஷ் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது குறித்து சந்தோஷ் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஹோட்டல் உரிமையாளர் தன்னை தரக்குறைவாக பேசி தாக்கியதாக புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 287

0

0