இரவில் தெருவிளக்குகளுக்கு அறிவிக்கப்படாத மின்வெட்டு… இருட்டில் அரங்கேறும் சம்பவங்கள்.. கண்டுகொள்ளுமா மாநகராட்சி நிர்வாகம்..?

Author: Babu Lakshmanan
8 July 2023, 10:35 am
Quick Share

இரவு நேரங்களில் தெருவிளக்குகள் அணைத்து வைக்கப்படுவதால் சமூக விரோத செயல்கள் அரங்கேறுவதால், காஞ்சிரம் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளது .இந்த வார்டுகளில் உள்ள தெரு மின் விளக்குகளை பராமரிக்க மாநகராட்சி தனியார் நபரிடம் ஒப்படைத்துள்ளது. மின்சார ஊழியர்கள் எவ்வளவு மெத்தனமாக இருப்பார்களோ, அதே போலவே மின் விளக்குகளை பராமரிக்கும் மாநகராட்சியின் நடவடிக்கைகளும் மாற்றமில்லாமல் உள்ளது.

காஞ்சிபுரம் நகரின் முக்கிய நுழைவு வாயிலான முதல் வார்டுக்கு உட்பட்ட பஞ்சுப்பேட்டை பெரிய தெரு, சின்ன தெரு, ஏகாம்பரபுரம் வீதிகள் ஆகியவற்றை சுற்றிலும் சுமார் 8000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அப்பளத் தொழில் பிரதான தொழிலாக இருப்பதால், அப்பள தொழில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலாளர்கள் நடமாட்டமும், சுங்குவார்சத்திரம் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் போன்ற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்துவிட்டு இரவில் வீடு திரும்பும் தொழிலாளர்களின் நடமாட்டமும் இரவு முழு நேரமும் இருக்கும்.

எப்போதும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இந்தப் பகுதிகளில் மாநகராட்சி மற்றும் மின்வாரியத்தின் அலட்சிய போக்கினால், மாலை ஆறு மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தெரு விளக்குகளுக்கு அறிவிக்கப்படாத மின்வெட்டை மாநகராட்சி தொடர்ந்து கடைபிடிக்கின்றது.

அதேபோல், வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரமும் அவ்வப்போது துண்டிக்கப்படுவதால், வெப்ப சலனத்தால் தூக்கமின்றி அவதிப்படும் மக்களும், கொசுக்கடியில் குழந்தைகளை வைத்துகொண்டு சிரமப்படும் பெற்றோர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றார்கள்.

அதிலேயும் மாநகராட்சியின் ஒண்ணாவது வார்டு மற்றும் இரண்டாவது வார்டு என இரண்டுலேயுமே திமுக மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டு வார்டுகளின் மாமன்ற உறுப்பினர்களும் வார்டுகள் பக்கமே வந்ததில்லை என்ற குற்றச்சாட்டு அனைவர் மத்தியிலும் உள்ளது.

இரவு நேரத்தில் தெருவிளக்குகள் அணைக்கப்படுவதால் மாநகராட்சியின் பல பகுதிகளில் சமூக விரோத செயல்களும் குற்ற செயல்களும் அதிகம் நடக்கின்றது.

தெரு விளக்குகள் இரவு நேரத்தில் எரியாததால் வேலைக்கு செல்லும் பெண் தொழிலாளர்கள் மிகுந்த பயத்துடன் வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் மூன்று / நான்கு முறை இளம்பெண்களிடம் பாலியல் தொந்தரவு நடந்துள்ளது. தெரு விளக்குகள் எரியாததை பயன்படுத்தி ரேஷன் அரிசி கடத்தல், நல்ல சந்தையில் மதுபானம் விற்பனை போன்ற சமூக விரோத செயல்கள் மிக எளிதாக நடைபெறுகின்றது.

Views: - 287

0

0