கழுத்தை நெறித்த கடன் பிரச்சனை… பூச்சி மருந்து குடித்து குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற பாமக பிரமுகர்… !!

Author: Babu Lakshmanan
9 August 2022, 3:33 pm
Quick Share

காஞ்சிபுரம் அருகே கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (48). விவசாயத் தொழில் செய்து வருகின்றார். இவருடைய மனைவி பெயர் நாகலட்சுமி (40). தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் விஜயகுமார் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகன் உறவினர் வீட்டில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

சரவணன் – நாகலட்சுமி தம்பதிக்கு சமீபகாலமாக கடன் தொல்லை கூடுதலாக ஏற்பட்டது. இதனால், குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினையும் நடைபெற்று வந்துள்ளது. இதில், மன உளைச்சல் ஏற்பட்ட சரவணன் தன்னுடைய மனைவிக்கும், மூத்த மகன் விஜயகுமாருக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இவர்கள் மூவரும் வயல் வெளியில் மயங்கி கிடந்ததை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியுற்று, அவர்கள் மூன்று பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பயிருக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த மூன்று பேரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.

சரவணன் பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ளதாகவும், சமீபகாலமாக கடன் பிரச்சனையும் குடும்ப பிரச்சனையும் தலைத் தூக்கியதால் இவர்கள் மூன்று பேரும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர் என தெரிய வருகிறது. இவர்களின் தற்கொலை முயற்சியினால் புதுப்பாக்கம் கிராமத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 555

0

0