சாலை விபத்தில் மாமியார், மருமகன் உடல்நசுங்கி பலி : லாரியை ஓவர்டேக் செய்யும் போது நிகழ்ந்த சோகம்..!

Author: Babu Lakshmanan
1 October 2022, 8:48 am
Quick Share

கரூர் அருகே முன்னால் சென்ற லாரியை கடக்க முயன்ற இரு சக்கர வாகனம் மீது லாரியின் சக்கரத்திற்குள் சிக்கி மாமியார், மருமகன் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கரூர் மாவட்டம் தோகைமலையில் உள்ள தனியார் கிரானைட் கல் குவாரியில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று ஒசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. தோகைமலையிலிருந்து பாளையம் வழியாக தாந்தோன்றிமலை நோக்கி வந்து கொண்டிருந்தது. வெள்ளியணையை அடுத்த பச்சபட்டி அருகே வந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் லாரியை முந்திச் செல்ல முற்பட்டனர்.

அப்போது லாரியின் பின்பக்க சக்கரத்தில் நிலைதடுமாறி விழுந்ததில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடலை மீட்ட வெள்ளியணை காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வெள்ளியணை காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் கனகராஜ் என்றும், அவர் கரூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்ததும், அவருடன் வந்தவர் அவரது மாமியார் சுசீலா என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

விபத்தினை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பழைய சுக்காம்பட்டியை சார்ந்த கண்ணன் என்பவர் வெள்ளியணை காவல் நிலையத்திற்கு லாரியை ஓட்டிச் சென்று ஆஜராகினார். அவரிடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 476

0

0