மது குடிக்க பணம் கேட்டு தகராறு…. டீ குடிக்க வந்தவரை அடித்து செல்போனை பறித்த 3 பேர் கொண்ட கும்பல் ; அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
30 December 2023, 11:24 am
Quick Share

கரூர் ரயில் நிலையம் அருகே டீ கடையில் மது குடிக்க பணம் கேட்டு கடை உரிமையாளரை தகாத வார்த்தையால் திட்டியும், டீ குடிக்க வந்த நபரிடம் 3 பேர் கொண்ட கும்பல் செல்போனை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரயில் நிலையம் முன்புறம் 3க்கும் மேற்பட்ட டீக்கடைகள் அமைந்துள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அதே பகுதியில் காயத்ரி நகர் பகுதியை சேர்ந்த லாவண்யா அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர் டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

அந்த டீக்கடையில் கடந்த டிசம்பர் 26ம் தேதி இரவு ஸ்ரீதர், பவுன், கந்தன் என்ற 3 பேரும் ஆட்டோவை நிறுத்திவிட்டு டீக்கடைக்குள் சென்று பணம் தராமல் சிகரெட் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு கடை உரிமையாளர் இல்லை என்று கூறியதற்கு மது குடிக்க பணம் வேண்டும் என்றும், தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி உள்ளனர்.

கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை மூன்று பேரும் சேர்ந்து அடித்து, அவர் வைத்திருந்த செல்போனை பறித்து கடையிலிருந்து வெளியே இழுத்து வந்து அடித்து விரட்டி உள்ளனர். அப்போது, அதை தட்டிக்கேட்ட கடை உரிமையாளரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தள்ளி உள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குறிப்பாக, மதுபானம் குடிக்க பணம் கேட்டு டீக்கடை உரிமையாளரை தாக்கிய போது, மாநகராட்சி திமுக கவுன்சிலர் பூபதி என்பவர் தடுத்து நிறுத்திய போதும், அவரை மதிக்காமல் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து டீக்கடை உரிமையாளர் லாவண்யா கரூர் நகர காவல் நிலையத்தில் பாதுகாப்பு வழங்க கோரி புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 279

0

0