‘முதல்வர் அறிவிச்சு ஒரு வருஷமாச்சு… இன்னும் இடம் கூட ஒதுக்கல’ ; மன்னர் ராஜகோபால தொண்டைமானின் குடும்பத்தினர் வேதனை..!!!

Author: Babu Lakshmanan
23 June 2023, 11:55 am
Quick Share

புதுக்கோட்டை ஆட்சி செய்த ராஜ ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபமும், அருங்காட்சியகமும் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து ஒரு வருடமாகியும், இடம் கூட ஒதுக்கவில்லை என்று மன்னரின் குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை சமஸ்தானம் என்பது மிகவும் பழமையான சமஸ்தானமாகும். சுதந்திர இந்தியாவில் இந்தியாவோடு இணைந்த கடைசி சமஸ்தானம் புதுக்கோட்டை சமஸ்தானம் தான். அன்றைக்கு கஜானாவில் இருந்த அனைத்து பொருட்களையும், நாணயங்களையும் இந்தியாவிற்கு அர்ப்பணித்ததோடு, மன்னர்கள் ஆண்ட அரண்மனை உள்ளிட்டவைகளையும் அரசிடம் அப்போதைய மன்னர் ஒப்படைத்தார்.

அதே போன்று தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வரும் மன்னரின் அரண்மனையையும அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி இடம் புதுக்கோட்டை மன்னர் ராஜ ராஜகோபாலத் தொண்டைமான் ஒப்படைத்தார். அவருக்கு கடந்த ஆண்டு நூற்றாண்டு விழா நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ராஜகோபாலத் தொண்டைமானுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு, அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர். அதன்படி, புதுக்கோட்டையில் மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு இதே நாள் அறிவித்தார்.

ஆனால், ஓராண்டு காலம் ஆகியும், இதுநாள் வரை மணிமண்டபம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கி தரவில்லை. குறிப்பாக, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மன்னர் நூற்றாண்டு விழாக்கமிட்டினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்திற்குள் முன்பக்கத்தில் இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் வேறு இடத்தில் தான் நாங்கள் ஒதுக்கி தருவோம் என்று மாவட்ட நிர்வாகம் கூறிவிட்டது. இதனால், ஓராண்டு காலமாகியும், இதனால் வரை இடம் ஒதுக்கப்படாமல் மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் கட்டுவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தான் மன்னரின் 101வது பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மன்னர் ராஜகோபால தொண்டைமான் சிலைக்கு மன்னர் குடும்பத்தை சேர்ந்தவரும், திருச்சி முன்னாள் மேயருமான சாருபாலா தொண்டைமான், அவருடைய கணவர் ராஜகோபால தொண்டைமான் மற்றும் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மன்னர் நூற்றாண்டு விழா கமிட்டியினர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி முன்னாள் மேயரும், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த வருமான சாருபாலா தொண்டைமான் கூறியதாவது :- தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும், சமஸ்தானத்தின் சொத்துக்கள் அனைத்தையும், அரசிடம் ஒப்படைத்த மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவில், கடந்த ஆண்டு முதல்வர் அவருக்கு அரசு சார்பிலேயே மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இது எங்களது குடும்பத்திற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், ஓராண்டு காலமாகியும் இதனால் வரை அதற்கு உண்டான இடத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கி தரவில்லை. பலமுறை மாவட்ட ஆட்சியர் உள்ள மனு அளித்தும், அவர்கள் நாங்கள் கேட்கின்ற இடத்தில் இடத்தை ஒதுக்கி தராமல், சுடுகாட்டிற்கு அருகே அவர்களாகவே 35 சென்ட் மட்டும் இடம் ஒதுக்கி தருகின்றனர். இது எங்களுக்கு மிகவும் மன வேதனையை அளிக்கிறது.

எனவே, தமிழக முதல்வர் இதனை கவனத்தில் கொண்டு, உடனடியாக நாங்கள் கேட்கும் இடத்தை ஒதுக்கித் தந்து, மன்னருக்கு மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Views: - 246

0

0