கோனியம்மனுக்கு சீர்வரிசை எடுத்துச் சென்ற காவல்துறையினர்… பரிவட்டம் கட்டி காவல் ஆய்வாளருக்கு மரியாதை!!

Author: Babu Lakshmanan
28 February 2024, 4:49 pm
Quick Share

கோவையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி, சீர்வரிசையை காவலர்கள் எடுத்துச் சென்றனர்.

கோவையின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது. கோவை மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் தேர் திருவிழாவை காண்பதற்கு வருவர்.

பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் அன்னதானம் நீர்மோர் குளிர்பானங்கள் ஆகியவற்றையும் வழங்குவர்.

தேர்நிலைத் திடல் பகுதியில் துவங்கும் இந்த தேரோட்டம் ஒப்பணக்காரர் வீதி வழியாக பிரகாசம் வந்தடைந்து மீண்டும் தேர் நிலை சென்றடையும்.

இந்நிலையில் வருடம் தோறும் கடைவீதி காவல் நிலையத்தில் இருந்து சீர் வரிசைகள் எடுத்துச் செல்லப்படும். அதன்படி, இந்த வருடமும் கடைவீதி காவல் நிலைய ஆய்வாளர் சசிகலா கோனியம்மனுக்கு சீர் வரிசைகளை எடுத்துச் சென்றார்.

முன்னதாக கோவில் நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு வந்து ஆய்வாளருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கடைவீதி காவல்துறையினர் பழங்கள், புடவைகள், பூமாலைகள் அடங்கிய சீர்வரிசைகளை எடுத்துச் சென்றனர்.

Views: - 141

0

0