தொடர் கொள்ளையனாக மாறிய சிறுவன்.. பல திருட்டு வழக்கில் சிக்கிய 3 பேர் கைது : போலீசார் விசாரணை

Author: Babu Lakshmanan
25 January 2022, 10:49 am

மதுரை அருகே கோவில் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சிறார் உட்பட 3 பேரை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கு என்பதால் மதுரை கப்பலூர் கண்ணன் காலனி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனை பயன்படுத்தி மூன்று பேர் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே, அங்கிருந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். ஒருவர் மட்டும் ஓடித் தப்பிக்க முயன்றபோது பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அந்த ஒருவரிடம் விசாரணை செய்து தப்பிச்சென்ற இருவரையும் போலீசார் பிடித்து தீவிர விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட தனக்கன்குளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஜெய சேகர் என்பவர் வீட்டில் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி தங்க நகை மற்றும் 20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றதும், இதனைத் தொடர்ந்து ஜனவரி 14-ஆம் தேதி மதுரை தோப்பூர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து பித்தளை முருகன் வேல், மற்றும் பித்தளை பொங்க பானை உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் கொண்டு திருடர்களைத் தேடி வந்த நிலையில், அந்தத் திருட்டை செய்தது இவர்கள் தான் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்ததில் திருப்பரங்குன்றம் மொட்டமலை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், சிவா (19), சேகர் (19) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. எனவே 3 பேர் கைது செய்த போலீசார் திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?