உண்மைக்கு மாறாக பொய்யை சொல்லிய நிர்மலா சீதாராமன்… இது ஒரு அமைச்சருக்கு அழகல்ல ; அமைச்சர் துரைமுருகன்..!!

Author: Babu Lakshmanan
22 January 2024, 1:09 pm
Quick Share

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்படியெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளை கூறக்கூடாது என்றும், இது அமைச்சருக்கு அழகு அல்ல என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பேருந்து நிலையத்தில் பொன்னையிலிருந்து சென்னை வரை செல்லும் புதிய பேருந்து இயக்க துவக்க நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு கொடியசைத்து புதிய பேருந்து இயக்கத்தினை துவக்கி வைத்தார். இதில் காட்பாடி ஒன்றிய பெருங்குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்பு இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது :- பொன்னை ஆற்றில் இருந்து சுகாதார முறையில் தண்ணீர் கொடுக்க நான் முயற்சி செய்து வருகின்றேன். நான் தண்ணீர் கொடுக்கும் ஆற்றில் குப்பைகள் கொட்டி வருகிறீர்கள். இது என் கவனத்திற்கு வந்துள்ளது. நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கிரிமினல் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “காலாவதியான கல்குவாரியை நடத்திக் கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தமிழகம் முழுவதும் கணக்கெடுத்துக் கொண்டுள்ளோம்,” என்றார்.

இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டுள்ளது. தமிழகத்தில் கோவில்களில் பூஜை செய்ய தமிழக அரசும், திமுகவும் தடை விதித்துள்ளதாக மத்திய அமைச்சர் குற்றம் சாட்டி உள்ளது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- மத்திய அமைச்சர் இப்படியெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளை கூறக்கூடாது. இது மந்திரிக்கு அழகு அல்ல.

தடுப்பணைகளுக்கான டெண்டர் முடிந்து விட்டது. விரைவில் பணிகள் துவங்கப்படும் மேலரசம்பட்டு தடுப்பணை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்து அறிக்கை வந்தவுடன் அந்தப் பணிகளும் துவங்கும், எனக் கூறினார்.

Views: - 558

0

0