பிரசவத்தின் போது உயிரிழந்த மைனர் சிறுமி… பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீசப்பட்ட சிசு : கையும் களவுமாக சிக்கிய பெண் மருத்துவர்!!

Author: Babu Lakshmanan
11 April 2023, 11:33 am
Quick Share

சேலம் ;சேலத்தில் திருமணமாகாத சிறுமி பிரசவத்துக்கு பிறகு உயிரிழந்தது தொடர்பாக பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் மருத்துவர் செல்வாம்பாள். இவர், திருமணமாகாமல் கர்ப்பமான 17 வயது சிறுமிக்கு பிரசவம் பார்த்தார். அந்த சிறுமிக்கு குறைபிரசவம் ஆனது. அப்போது சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே சிறுமியை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே சிறுமிக்கு பிறந்த குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி ஆட்கள் இல்லாத பகுதியில் வீசப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. தகவல் அறிந்த மருத்துவ குழுவினர் குழந்தையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வட்டார மருத்துவ அலுவலர் ஜெயசெல்வி அளித்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி பெண் மருத்துவர் செல்வாம்பாள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு கடந்த 3 நாட்களாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு பெண் மருத்துவர் மோகனம்பாள் கைது செய்யப்பட்டார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

Views: - 296

0

0