2 மகள்களை கொன்று விட்டு முன்னாள் ராணுவ வீரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை : கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு

Author: Babu Lakshmanan
9 June 2022, 9:03 am
Quick Share

பழனியில் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பழனி தட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் ஃபர்கான்(41). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சபீனா. இவர்களுக்கு சனா, எமீனா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை முதலே வீட்டிற்கு வெளியே யாரும் வராமல் இருந்த நிலையில், பிற்பகலில் இருந்து வீடு உள்புறம் பூட்டி திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டினர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, சபீனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பழனி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சபினா எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 709

0

0