வெகுவிமர்சையாக பழனி கோவிலில் நடந்த போகர் ஜெயந்தி விழா.. பச்சை மரகத லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் ; பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்!!

Author: Babu Lakshmanan
18 May 2023, 6:25 pm

பழனி மலை மீது போகர் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பச்சை மரகத லிங்கத்திற்கு நடைபெற்ற அபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பழனி முருகன் கோயில் மலை மீதுள்ள நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கியவர் சித்தர் போகர். போகரின் ஜீவசமாதி பழனி மலை மீது வெளிப் பிரகாரத்தில் அமைந்துள்ளது. பழனி முருகனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சித்தர் போகரையும் வணங்கி விட்டுச் செல்கின்றனர். போகர் ஜீவசமாதி அவரின் சீடர் சித்தர் புலிப்பாணியின் வாரிசுகள் இன்று வரையில் பராமரித்து வருகின்றனர்.

சித்தர் போகரின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் மலை மீது உள்ள போகரின் ஜீவசமாதி விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சித்தர் போகர் மற்றும் புலிபாணியால் வணங்கப்பட்டு வந்த பழமையான பச்சை மரகத லிங்கம் மற்றும் புவனேஸ்வரி அம்மனுக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பழ வகைகள் உட்பட 14 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் பழனி ஆதினம் ஸ்ரீமத் போகர் சிவானந்த புலிப்பாணி பாத்திர சாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…