லீவு போட்டு கோவிலுக்கு சென்ற மாணவனை தாக்கிய பள்ளி தாளாளர் : அன்னை தெரசா பள்ளி நிர்வாகத்தின் மீது பெற்றோர் பரபர புகார்!!

Author: Babu Lakshmanan
3 March 2023, 4:18 pm
Quick Share

கன்னியாகுமரி : கோவில் திருவிழாவிற்கு விடுப்பு எடுத்த மாணவனை பள்ளி தாளாளர் தாக்கிய நிலையில், படுகாயமடைந்த மாணவன் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. இவரது இளைய மகன் அருண் ஜெயம் மைலகோடு மதர் தெரசா மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு கணித பிரிவில் பயின்று வருகிறார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று அருண் ஜெயம் தங்களது கோயிலில் நடைபெற்ற காவடி கட்டு திருவிழாவில், உடன் பிறந்த சகோதரர் அலகு குத்தி திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்லும் நிலையில், அதில் கலந்து கொள்வதற்காக பள்ளி செல்லாமல் விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதன் கிழமை பள்ளிக்கு சென்ற அருண் ஜெயத்தை தாளாளர் ராபின்சன் பிடிட், தனது அறைக்கு அழைத்து கதவுகளை பூட்டி விட்டு மாணவனிடம், ‘யாரை கேட்டு கோயிலுக்கு விடுப்பு எடுத்து சென்றாய்,’ என கேட்டு கைகளாலும், பிரம்பாலும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில், மாணவன் அருண் ஜெயம்க்கு வலது கையில் இரண்டு இடங்களில் இரத்த காயம் ஏற்பட்டதோடு, உடலிலும் காயம் ஏற்பட்டு வலியில் துடித்துள்ளார். காயங்களுடன் வீட்டிற்கு வந்த அவருக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து தாயார் ஜெயந்தியிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு பதறிப்போன அவர், காயங்களுடன் உடல் நலக்குறைவு ஏற்பட்ட தனது மகனை சிகிச்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

கோயில் திருவிழாவிற்காக விடுப்பு எடுத்த தனது மகனை பள்ளி தாளாளர் ராபின்சன் பிடிட், பிரம்பு மற்றும் கைகளால் தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் இரணியல் போலீசார் பள்ளி தாளாளர் மற்றும் நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து பள்ளி தாளாளர் ராபின்சன் பிடிட் செல்போனில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது, இது தொடர்பாக பள்ளியில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருவதாகவும், போலீசார் விசாரணை நடத்தி வருவதால் தற்போது விளக்கம் தர முடியாது, எனக் கூறி தொடர்பை துண்டித்து விட்டனர்.

Views: - 614

0

0