‘யாராவது மிரட்டுனா வீட்டுல சொல்லிடுங்க’.. பேருந்தில் ஏறி கல்லூரி மாணவிகளிடம் வாக்குசேகரித்த சௌமியா அன்புமணி..!!

Author: Babu Lakshmanan
30 March 2024, 7:45 pm
Quick Share

நான் உங்க அம்மா மாதிரி, நீங்கள் எதுக்கும் பயப்பட வேண்டாம் என்று வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் மாணவிகளுக்கு பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி அட்வைஸ் செய்தார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலாம்பட்டி பகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து, அவ்வழியாக வந்த தனியார் பேருந்தில் ஏறிய சௌமியா அன்புமணி, பேருந்தில் இருந்தவர்களிடம் வாக்குசேகரித்தார். அவர் கூறியதாவது :- நான் நல்லா வேலை செய்வேன். உங்களுக்கான பணி செய்ய காத்திருக்கிறேன். படிச்ச பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த பாடுவேன். இந்த பகுதியில் சிப்காட் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

அதனை மீண்டும் துவக்கி உங்கள் சொந்த ஊரிலே உங்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். இங்கு நிலவி வரும் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பேன். உங்களை தொழில் முனைவோராக மாற்ற நான் முயற்சி எடுப்பேன். நீங்க எல்லோரும் சொந்த கல்ல நிக்கணும்னா, எனக்கு உங்க வாக்கை செலுத்துங்க, என பேசிய அவர், பேருந்தில் பயணித்த பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

அதனை தொடர்ந்து, மாணவிகளிடம்,” நான் உங்க அம்மா மாதிரி. எதுக்கும் கவலைப்படாதீங்க. எல்லாத்தையும் அப்பா, அம்மா கிட்ட சொல்லுங்க. உங்க செல்பி மத்த போட்டோ எல்லாம் சோசியல் மீடியாவுல பார்த்து போடுங்க. யாரு கையிலயும் உங்க புகைப்படம் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

அப்படியே கிடைத்தாலும் பயப்படாதீங்க. உங்க போட்டோ வச்சோ, மத்ததை வச்சு யாராவது பயமுறுத்தினால் சைபர் கிரைம் இருக்கு, அவங்க பாத்துக்குவாங்க. இதை நான் மாம்பழத்துக்கு ஓட்டுபோடனும்ன்னு அப்படிங்கிறதுக்காக சொல்லல. உங்களை என் பொண்ணா நினைச்சி, என் பொண்ணுங்களுக்கு என்ன சொன்னேனோ, அதை தான் நான் உங்களுக்கு விழிப்புணர்வுக்காக சொல்றேன்,” என பேசினார்.

Views: - 157

0

0