கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் ராகிங் கொடுமை… உடம்பில் ரத்த காயங்கள் ; மாணவன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!!

Author: Babu Lakshmanan
9 November 2023, 6:09 pm
Quick Share

தனியார் கல்லூரியில் நடைபெற்ற ராக்கிங் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவர் உடம்பில் உள்ள காயங்களில் வீடியோ வெளியாகி உள்ளது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவரை, அதே கல்லூரியில் படிக்கும் 7 மாணவர்கள் மொட்டை அடித்து ராகிங் செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், ராகிங்கில் ஈடுபட்ட பரணிதரன், வெங்கடேஷ், மாதவன், மணி, ஐயப்பன், சந்தோஷ், யாலிஸ் ஆகிய ஏழு மாணவர்களை பீளமேடு காவல்துறையினர் கைது செய்து ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்பு இரவு நேரத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, இந்த வழக்கில் வெங்கடேஷ் என்ற மேலும் ஒரு மாணவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் உடலில் காயங்கள் உள்ள வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. மேலும் அனைத்து கல்லூரிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 319

0

0