இது காலம் கடந்த பேச்சு… கட்சி ஆரம்பித்து விட்டு தூங்க போயிட்டாரு… நடிகர் விஜய் மீது கிருஷ்ணசாமி பாய்ச்சல்…!!

Author: Babu Lakshmanan
8 February 2024, 11:12 am
Quick Share

தற்போது அரசியலில் புதிய சூழல் உருவாகி உள்ளதாகவும், பாஜக, அதிமுக கூட்டணி என்பது காலம் கடந்துவிட்டதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இல்லத்தில் நடைபெற்றது. இதற்கிடையே, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்தித்தார்.‌

அப்போது அவர் பேசியதாவது :- புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்ட குழுவினர் 130 பேர் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாகவும், அப்போது, கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் 12 கேள்விகள் அடங்கிய படிவம் கொடுக்கப்பட்டு, தமிழக தேர்தல் கள நிலவரம் குறித்து எழுத்து பூர்வமாக பெறப்பட்டதாகவும், அத்துடன், தொடர்ந்து ஒவ்வொருவருடைய கள அனுபவம் குறித்து கேட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், அதுதொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படுவதாக கூறிய அவர், இக்கூட்டத்தில், கூட்டணி குறித்து முடிவெடுக்க முழு அதிகாரம் தனக்கு கொடுத்து தீர்மானம் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வலுவான கூட்டணி என்றால் எண்ணிக்கையில், கொள்கை அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், அதிகபட்சம் 2-3 தொகுதிகள் கேட்பதாகவும், அகல கால் வைக்க விரும்பவில்லை என்றார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என சொல்வதற்கு இடமிருக்கா என்பது தெரியவில்லை என்றும் ஏனெனில், அதிமுக அதிலிருந்து பிரிந்து விட்டதால், புதிய கட்சி தான் உருவாக தான் வாய்ப்பு என்றும், பழைய நிலையில் இல்லை என தெரிவித்தவர், தங்களுக்கு சுதந்திரமான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது அரசியலில் புதிய சூழல் உருவாகி உள்ளதாகவும், பாஜக, அதிமுக கூட்டணி என்பது காலம் கடந்துவிட்டதாகவும் என்றவர், ஏப்ரல் மாதம் தான் தேர்தல் என்பதால் இன்னும் நேரம் உள்ளதால் கள ஆய்வு உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பின் முடிவெடுக்கப்படும் என்றும், யாருடைய கூட்டணி என்று எந்த முடிவுக்கும் இதுவரை வரவில்லை, என்றார்.

தமிழகத்தில் இப்போது 3 அணியாக தான் தமிழகத்தில் உள்ளதாகவும், வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம் என்றும், மக்களவை, மாநிலங்களவை அங்கீகாரம் புதிய தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் கூட்டணி அமையும் என்றவர், நாடாளுமன்றத்தில் வலுவாக தமிழகம் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் என்றும், தமிழகத்திற்கு எந்த நலனும் வந்து சேரவில்லை என்றும் குற்றச்சாட்டினார்.

நல்லது யார் செய்தாலும் பாராட்டி உள்ளதாகவும், பகை உணர்வோடு எதிரி தன்மையுடன் விமர்சனம் செய்வதில்லை என்றவர், நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என சொல்ல தேவையில்லை என்றார்.

அதிமுகவை மட்டும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும், அனைவருக்கும் தான் கதவு திறந்திருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாக குறிப்பிட்டவர், நாடாளுமன்றத்தில் உறுப்பினர் முக்கியமான விஷயம் குறித்து பேசும்,போது, அதை திசைத்திருப்பது போன்று பேசுவது சரியில்லை என நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இடையேயான சர்ச்சை தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். மேலும், தமிழகத்திற்கு பிரதமர் வரும்போது அழைப்பு இருந்தால் பிரதமரை பார்க்கலாம் என்றார்.

தொடர்ந்து, நடிகர் விஜய் துவங்கியுள்ள கட்சி குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், கட்சி ஆரம்பித்தவுடன் உறக்கத்திற்கு சென்று விட்டார்கள் எனவும், எழுந்திருக்கும் பொழுது அதைப் பற்றி பேசுவோம் எனவும் பதிலளித்தார்.

Views: - 193

0

0