கெட்டுப்போன முட்டை… மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் : அரசுப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
3 February 2023, 7:06 pm

ராமநாதபுரம் : பரமக்குடி நகராட்சி பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையா புரத்தில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்கள் பெண்கள் என மொத்தம் 240 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு பள்ளியிலே வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று மதியம் உணவு இடைவேளையில், உணவு சாப்பிட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மதிய உணவில் வழங்கப்பட்ட முட்டை கெட்டுப் போயிருந்ததால் மாணவ, மாணவிகளுக்கு இவ்வாறு ஏற்பட்டு உள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை தரம் இல்லாமல் வழங்கியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!