ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவு.. தெருக்களில் தூவிச் சென்ற தூய்மை பணியாளர்கள் ; சென்னையில் அவலம்

Author: Babu Lakshmanan
13 December 2023, 2:29 pm
Quick Share

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவை தூய்மைப் பணியாளர்கள் தூவிச் சென்ற சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் பெய்த கனமழையினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்கும் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து போகியுள்ளனர். படகுகள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டது.

அதோடு, குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் குளம் போல தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணி தற்போதும் நீடித்து வருகிறது. மேலும், வெள்ள நீர் வெளியேற்றப்பட்ட இடங்களில் தற்போது சுகாதர பணிகள் நடைபெற்று வருகின்றது.மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குவிந்த குப்பைகளை அகற்றி அதனை தொடர்ந்து அங்கு பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையை அடுத்த செங்குன்றம் டாக்டர் வைத்தீஸ்வரன் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவை தூய்மைப் பணியாளர்கள் தூவிச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தூய்மை பணியாளர்களை மடக்கி அப்பகுதி மக்கள் கேட்ட போது, அதிகாரிகள் கொடுத்த ப்ளீச்சிங் பவுடரை தான் தூவி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் தானாக நடைபெற்றதா..? அல்லது அதிகாரிகளின் அலட்சியமா என்பது இன்னும் தெளிவாகாத நிலையில், இதனை இணையதளவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

Views: - 238

0

0