அமெரிக்கா கொடி… திடீரென இறங்கிய ஹெலிகாப்டர்… பென்ஸ் காரில் வந்து இறங்கியவர்கள் யார்..? சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பு

Author: Babu Lakshmanan
15 December 2023, 4:42 pm
Quick Share

சாத்தான்குளம் அருகே காட்டுப் பகுதியில் திடீரென இறங்கிய ஹெலிகாப்டர். பென்ஸ் காரில் தின்ஸ்காக வந்து இறங்கியவர் யார்? அமெரிக்க கொடி கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது யாருக்கு? என கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அதிக அளவில் பனை மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதில் சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலசேரி நாசரேத் சாலைக்கு நடுவே காட்டுப்பகுதியில் கடந்த 10 தினங்களாக விலை அதிகமான கார்கள் அவ்வப்போது வந்து சென்றுள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலை அந்த பகுதி பரபரப்பாக இருந்துள்ளது. கார்கள் வந்து சென்ற இடம் இரவோடு இரவாக தகரம் அமைத்து அடைக்கப்பட்டிருந்தது. இதில், இந்தியா அமெரிக்கா நாட்டின் கொடிகள் நடப்பட்டிருந்தது. அந்த இடத்தின் அருகே ஏதோ வாகனம் இறங்கும் வண்ணம் ஒரு தற்காலிக பாதையும் அமைக்கப்பட்டிருந்தது. தார்ச்சாலையும் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு நின்றவர்கள் பரபரப்பாக யாரையோ எதிர்பார்த்து நின்றது போல் தெரிந்தது.

இந்த பரபரப்பான நேரத்தையும் இடத்தையும் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென ஒரு ஹெலிகாப்டர் வருகிற சத்தம் கேட்டுள்ளது. அருகே திசையன்விளை பகுதியில் கடற்படை தளத்திற்கு அடிக்கடி ஹெலிகாப்டர் வந்து செல்லும். அங்கு செல்லும் ஹெலிகாப்டர் இந்த வழியாக செல்வதாக நினைத்த கிராமத்து மக்கள் வானத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

திடீரென வானத்தில் பறந்த ஹெலிகாப்டர் பரபரப்பாக நின்று கொண்டிருந்தவர்கள் அருகே இறங்கியது. என்ன நடக்கிறது என்று தெரியாமல் பொதுமக்கள் குழம்பி நின்றனர். தரையில் இறங்கிய ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய சிலர் அருகே நின்ற பென்ஸ் காரில் ஏறினார். பென்ஸ் கார் மெதுவாக இவர்களுக்காக தற்காலிகமாக தயார் செய்யப்பட்டிருந்த ஷெட்டுக்கு சென்றது. காரின் நான்கு டயரின் அருகே நான்கு பேர் ஜாக்கிங் போவது போல் நடந்து சென்றனர். அதன் பின்னர் உள்ளே நடந்தது என்ன என்பது யாருக்கும் தெரியாது.

அங்கு நின்ற சிலரிடம் விசாரித்ததில் இங்கு ஏதோ பெரிய கம்பெனி வருவதாகவும், காரின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி எனவும் கூறினர். சில நேரத்தில் வந்த வாகனம் மீண்டும் அதே ஹெலிகாப்டர் நின்ற இடத்திற்கு சென்றது. காரில் வந்தவர்கள் அதில் ஏறி கிளம்பினர். இதை அங்கு நின்ற சில இளைஞர்கள் தங்களது போனில் படம் பிடித்துள்ளனர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் அந்த பகுதியில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த காட்சிகள் தற்போது சாத்தான்குளம் பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

அங்கு நடப்பட்டிருந்த இந்திய அமெரிக்க கொடி அடிப்படையில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் ஏதோ பொருட்கள் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் நடைபெற்று, அதற்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. கிராமத்தில் அதுவும் காட்டுக்குள் திடீரென ஹெலிகாப்டர் இறங்கிய சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 386

0

0